Tuesday 30 January 2018

தேவர் வரலாற்றில் ஜனவரியில் சில

தேவர் வரலாற்றில் ஜனவரியில் சில

பசும்பொன் தேவரை குறுக்கு வழியில் வீழ்த்த காங்கிரஸ் கட்சியால் கொலை செய்யப்பட்ட இம்மானுவேல் கொலை வழக்கில் தேவர் விடுதலை ஆன நாள் 07-01-1959

நேதாஜி உயிருடன் உள்ளார் என தேவர் அறிவித்த தினம் 23-01-1949

கோரிப்பாளையம் தேவர் சிலை வைக்கப்பட்ட நாள்
05-01-1974.

தேவரை ஆசிரியராக கொண்டு நேதாஜி எனும் வார பத்திரிகை தொடக்கம் செய்த நாள் 23-01-1948

இராஜாஜியும் தேவரும் மதுரை தமுக்கத்தில் ஒரே மேடையில் பேசிய நாள் 14-01-1962 (தேவரின்  கடைசி மேடைப் பேச்சு இது தான்)

தேவர் புகழ் நிலையானது

பசும்பொன் தேவரின் புகழ் நிலையானது உயர்வானது. நம்மால் அவருக்கு பெருமை சேர்க்க ஒன்றுமில்லை, அதற்கு எதிராக எத்தனை பேர் சேர்ந்து முயன்றாலும் அவர் புகழ் இம்மியளவும் குறைய போவதுமில்லை. அவரின் பெருமையை அந்த கடவுளின் சக்தியே காத்துகொள்ளும்.

தேவர் சிலைக்கு அனுமதி

1968ம் ஆண்டே கோரிப்பாளையம் சிலை வைக்க முயற்சி ஆரம்பித்திருந்தாலும் சிலை திறக்கப்பட்ட நாள் 05-01-1974 அன்று தான். அந்த இடத்தில் தேவருக்கு பதிலாக அண்ணாத்துரைமுதலியார் சிலை வைக்க முயன்ற வரலாறும் உண்டு.
பார்த்தீர்களா! அப்போது  பல MLAக்களை கொண்ட கட்சியாக பார்வர்ட் பிளாக் இருந்தும், அவ்வளவு அரசியல் பலம் இருந்தும் ஏதோ ஒரு காரணத்தால் கோரிப்பாளையத்தில் தேவர் சிலை வைக்க 6வருடம் தாமதமாகி உள்ளது. அதே நிலை தான் இன்றும். ஆனால் இன்று மூக்கையாத்தேவர் போன்ற தலைவர் நமக்கு இல்லாத காரணத்தால் 10 வருடமாக பட்டா இடத்தில் சிலை வைக்க அனுமதி கிடைக்காமல் கிராம மக்கள் போராடும் நிலை. சட்டத்தை மீறி வைக்க தூண்டுவது இங்கு ஆட்சியாளர்கள் தான். மக்கள் தேவர் மீது கொண்ட பக்திக்கு முன் சட்ட மீறலும், அதனால் வரும் வழக்கு சிறையையும் பொருப்படுத்துவதில்லை.

R.சோடனேந்தல் கிராமத்தின் நிலைமட்டுமல்ல இது. 7 வருடங்களுக்கு முன் இதே கமுதி பகுதியில்  எருமகுளம் எனும் கிராமத்தில் தேவர் சிலை வைக்க முயன்ற வழக்கில் அந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் முதல்கொண்டு பலர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர்   7 வருடங்கள் கிடப்பில் போடப்பட்டு இரவோடு இரவாகத்தான் தேவர் சிலை வைக்க முடிந்தது. சட்டப்படி அனுமதிக்காக காத்திருந்தால் இன்று அந்த ஆலயம் பாழடைந்த கட்டிடமாகி போயிருக்கும்.

தேவர் குருபூஜைக்கு கூட மக்கள் கூடாதவாறு 144 தடை போட்டு தடுக்கும் அரசாங்கத்திடம், மத்திய அரசு மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் வைக்க தயாராக இருந்தும்,  தொடர்ந்து மறுத்து வரும் தமிழக அரசிடம் தேவர் ஆலயம் அமைக்க மக்கள் அனுமதி கேட்பது என்பது திருட்டு,  கொலை, கொள்ளைக்காரனிடம் கருணையை எதிர்பார்ப்பது போலாகும்.

குறிப்பு: தற்போது இராமநாதபுரத்தில் திருமண நிகழ்வில் கூட தேவர் பிளக்ஸ் படம் பயன்படுத்த தடை உள்ளது.  வீட்டு வாசல்ல கூட வைக்க முடியாது.

படம்: எருமகுளம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகம், நாயக்கர் சமூகம் உள்பட அனைத்து சமூக மக்களும் ஒன்றாக இணைந்து கட்டிய ஆலயம். 7வருடங்களாக அனுமதி கேட்டு போராடியதில் சிறைத் தண்டனை கிடைத்தது தான் பாக்கி என வெறுத்து, இரவோடு இரவாக 21-10-2012 அன்று வைக்கப்பட்ட காலத்தில் ஆலயம் இருந்த நிலையும் , தற்போதைய தேவர் ஆலய நிலையும்.

Monday 29 January 2018

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது!

பசுமலையில் படிக்கும்போது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அருகிலுள்ள திருப்பரங்குன்றத்திற்குப் போவார் முத்துராமலிங்கம். முருகப் பெருமானை வழிபடுவார். திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் சித்தர்களுடன் மணிக்கணக்கில் உரையாடுவார். அவர்களிடம் சில சித்து வேலைகளைக் கற்றுக் கொள்வார்.

அப்படி ஒரு முறை, அவர் திருப்பரங்குன்றத்துக்குப் போய் திரும்பும்போது தான் அந்த சம்பவம் நடந்தது. வழியில் பெருங்கூட்டம். கூட்டத்துக்கு நடுவே ஒரு பாதிரியார் மதப் பிரசாரம் செய்துகொண்டிருந்தார்.

'இயேசு கிருஸ்துவே உண்மையான ஆண்டவர். அவர் பாவிகளை விருப்பத்தோடு அழைக்கிறார். பாவங்களை மன்னிக்கிறார். அவரைப் பின்பற்றுபவர்களுக்கு மோட்ச ராஜ்ஜியத்தை அளிக்கிறார்.'

முத்துராமலிங்கமும் கூட்டத்தோடு நின்று வேடிக்கை பார்த்தார். மிக ஆவேசமாக பிரசங்கம் செய்துகொண்டிருந்தார் அந்த மத போதகர்.

'இங்கே பாருங்கள்! இது என்ன?'

'கல்!'கூட்டத்திலிருந்து ஒரு குரல் வந்தது.

'இதுவும் கல்தான். கோவிலில் நீங்கள் வழிபடும் சிலையும் கல்தான். அப்படி இருக்க, ஒரு கல்லைப் போய் நீங்கள் கடவுள் என வழிபடலாமா?'

இப்படி சொல்லிவிட்டு பாதிரியார் கூட்டத்தை எகத்தாளத்தோடு சுற்றிப் பார்த்தார்.

அவ்வளவுதான். அதற்குப் பிறகு முத்துராமலிங்கத்துக்குப் பொறுக்கவில்லை.

'ஐயா! எனக்கு ஒரு சந்தேகம்!'

'கேள் தம்பி!'

'உங்களுக்கு அம்மா இருக்கிறார்களா?'

'இருக்கிறார்கள்.'

'மனைவி?'

'இருக்கிறார்.'

'சகோதரிகள்?'


'உண்டு.'

'அப்படியானால், அவர்கள் எல்லோருமே பெண்கள் தானே! இவர்கள் எல்லோரையும் நீங்கள் ஒன்றுபோல்தான் பார்க்கிறீர்களா? ஒன்றுபோல்தான் நடத்துகிறீர்களா? அப்படிப் பார்க்கவோ, நடத்தவோ முடியாது. இல்லையா? அதுபோலத்தான் நாங்களும். ஒரு கல்லைச் சிலைவடிவில் தெய்வமாகக் காண்கிறோம். மற்றொன்றை வீடு கட்டப் பயன்படும் சாதாரணக் கல்லாகக் காண்கிறோம். மற்றொன்றை சாலை போடப் பயன்படும் சாதாரணக் கல்லாகப் பார்க்கிறோம்.'

பாதிரியார் பதில் சொல்ல முடியாமல் விழித்தார். கூட்டம் கைதட்டி ஆரவாரம் செய்தது.

தலைகுனிந்திருந்த பாதிரியாரைப் பார்த்து முத்துராமலிங்கம் சொன்னார்;  'ஐயா! உங்களையோ, உங்கள் மதத்தையோ, கடவுளையோ இழிவுபடுத்த வேண்டும்மென்பது என் நோக்கம் அல்ல. அதே போல நீங்கள் பிற மத நம்பிக்கையை இகழ்வதும் தவறு. நீங்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தான் நான் அப்படிப் பேசினேன். நான் பேசியது உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன், ' என்றார் சிறுவன் முத்துராமலிங்கம்.

*******************************
"தேவர் ஒரு வரலாறு" எனும் நூலிலிருந்து.

பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் மாணவ பருவத்தில் நடந்த நிகழ்வு. சிறுவயதில் நடந்த நிகழ்வை கூறுவதால் முத்துராமலிங்கம் என தேவரின் பெயரை நூலின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

தேவரின் சட்டப்படியான பெயர்.
"உ.முத்துராமலிங்கத்தேவர்" என்பதே ஆகும்.

பகதூர் வெள்ளையத்தேவன் புகழ்

#பகதூர்_வெள்ளையத்தேவன்_பற்றி_தெய்வீகத்_திருமகனார்_கூறியது..

ஆங்கிலேயரான கவர்னர் கட்டபொம்மனையும், வெள்ளையத் தேவனையும் அழைத்துக் கொண்டு ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு வருகிறார்.

அங்கே மிக உயரமான பஞ்சாப் குதிரைகள் ஐந்து நிற்கிறது. குதிரைகள் ஐந்துக்கும் கடிவாளம் கட்டவில்லை. அப்போது கவர்னர் கட்டபொம்மனைப் பார்த்து கட்டபொம்மன் அவர்களே உங்களைப் பெரிய வீரர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். கடிவாளம் இல்லாத இந்தக் குதிரை மீதேரி நீங்கள் சவாரி செய்ய வேண்டும் என்று கூறினார்.

கட்டபொம்மன் மிகவும் அலட்சியமாக இந்தச் சிறு வேலையை நான் செய்ய வேண்டியதில்லை. என்னுடைய தளபதி வெள்ளையத்தேவன் செய்வார் அவரால் முடியாவிட்டால் அப்புறம் நான் செய்கிறேன் என்கிறார்.

முன்னங்கால் இரண்டையும் உயரத் தூக்கி வெள்ளையத் தேவனைத் தாக்க வரும் குதிரையின் நீளமான பிடரி மயிரைப் பிடித்து தாவி ஏறி உட்கார்ந்து சிறிது தூரம் சென்றதும் தனது காலால் வர்ம அடி அடிக்கவும் குதிரை சடாரென கீழே விழுந்து புஸ் என நுரை தள்ளித் துடிக்கிறது. அதுபோல நான்கு குதிரைகளையும் வெள்ளையத் தேவன் வர்ம அடியால் வீழ்த்தி நுரை தள்ளித் துடிக்க வைக்கிறார்.

தளபதியே இவ்வளவு வீரனாக இருத்தால் ராஜா இதைவிடப் பெரிய வீரனாகத்தான் இருப்பார் என்று கவர்னர் கருதி ஐந்தாவது குதிரையை வெள்ளையத் தேவனுக்குப் பரிசாகக் கொடுத்து பகதூர் வெள்ளையத் தேவன் பட்டத்தையும் கொடுத்தார். அன்று முதல் வெள்ளையத் தேவன் பகதூர் வெள்ளையத்தேவனாக மாறினார்.

#வாழ்க_பகதூர்_வெள்ளையத்தேவன்_புகழ்..

கொண்டையன்கோட்டை மறவர் கிளை

தமிழ் மறவர் பேரினம் மொத்தம் 38 பிரிவுகளைக் கொண்டது.. அதில் கொண்டையன்கோட்டை மறவரில் 18 கிளைகள் உண்டு.. மூன்று கிளைகளுக்கு ஒரு கொத்து வீதம் மொத்தம் 6 கொத்துக்களை கொண்டது..

#கொண்டையங்கோட்டை_மறவர்களின்_கிளையும்_கொத்தும்..

மிளகு கொத்து
   1.வீரமுடி தாங்கினர்(வீரன்) கிளை (அன்னை மீனாட்சி தேவி கிளை)
   2.சேதார் கிளை..
   3.சேமந்தா ( ஜெயங்கொண்டார்) கிளை

வெற்றிலை கொத்து
  1.அகஸ்தியர் (அகத்திய) கிளை
  2.மருதசா (மறுவீடு) கிளை
  3.அழகிய பாண்டியன் (அரவணன்ட) கிளை ( தெய்வீகத் திருமகனார் கிளை)

தென்னங்கொத்து
  1.வாணியன் ( வீணையன், வீனியன்) கிளை
  2.வேட்டுவர் கிளை (வெட்டுமங் கிளை)
  3.நடைவேந்தர் கிளை ( நாட்டை வென்றான் கிளை)

கமுகம் கொத்து
  1.கேல்நம்பி கிளை
  2.அன்புத்ரன் கிளை
  3.கௌதமன் கிளை

ஈச்சங்கொத்து
  1.சடச்சி கிளை
  2.சங்கரன் கிளை
  3.பிச்சிபிள்ளை கிளை

பனங்கொத்து
1.அகிலி கிளை
2.லோகமூர்த்தி கிளை
3.ஜாம்புவர் ( ஜாம்பவான்) கிளை..

காலம் மாற மாற பல்வேறு கிளைகளை புகுத்தியும் மேலும் அவனவன் மாற்றியும் திரித்தும் விட்டார்கள்..

இது தான் பண்டைய கால பாண்டியர்களான அசல் கொண்டையன்கோட்டை மறவர்களின் கிளைகளும் கொத்தும் ஆகும்..

இதை தவிர்த்து அரசமங்கிளை(அரசன் கிளை), கொடியன் கிளை (கொடையன் கிளை), சுக்காங்கிளை, நாட்டுக்கெச்ச கிளை இது போன்ற கிளைகள் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் உருவானவை ஆகும்..

கொடையன் கிளையே மருவி கொடியன் கிளை ஆனது.. அரசன் கிளையே மருவி அரசமங்கிளை ஆனது.. இரண்டும் ஏலக்கொத்து ஆகும். சகோதர உறவு ஆகும்..

Saturday 27 January 2018

தேசபக்தி தினம் -ராமநாடு ஆர்ப்பாட்டம்

மாவீரர் நேதாஜி பிறந்தநாளை தேசபக்தி தினமாக கொண்டாட வலியுறுத்தி அகில இந்திய பார்வட்பிளாக் மற்றும் இராம்நாடு தேவர் நலசங்கம் நடத்தும் கோரிக்கை ஆர்பாட்டம் சிறப்பாக நடைப்பெற்றது.....
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

Friday 26 January 2018

இணையில்லாத் தலைவர் நேதாஜி

"ஒரு லட்சியத்துக்காக ஒருவன் மடியலாம் ,

ஆனால் அவன் மாண்டபிறகு ஆயிரம் பேரை அந்த லட்சியம் பற்றிக்கொள்ளும் ,

- ஒரு மனிதன் வாழ்ந்தான் -லட்சியதிர்க்காக உயிரை விட்டான் என்பதை விட வேறென்ன பெருமை வேண்டும்

.அதோ அந்த நதியின் கரைக்கு அப்பால்,

அந்த அடர்ந்த காடுகளுக்கும் பின்னால்,

நம் கண்களில்படும் அந்த மலைகளுக்கும் பின்னால்

நமக்காக உறுதியளிக்கப்பட்ட அந்த பூமி உள்ளது

- எந்த மண்ணில் இருந்து நாம் உயிர்பெற்றோமோ - அந்த பூமியை நோக்கி நாம் திரும்புகிறோம்.

புறப்படுங்கள், இந்தியா அழைக்கிறது..

. ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது.

கிளர்ந்தெழுங்கள், உங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

நம்மை அடிமையாக்கிய எதிரிகளின் படைகளை கிழித்துக் கொண்டு நமது பூமிக்கு பாதை அமைப்போம்

அல்லது இறைவனின் சித்தம் வேறானால் வீரர்களுக்குரிய தியாக மரணத்தை தழுவுங்கள்.

நமது கடைசி மூச்சில் டெல்லிக்கு செல்லும் நமது பாதைக்கு முத்தமிட்டுவிட்டுச் சாவோம். டெல்லிக்கு செல்லும் பாதை, விடுதலை நோக்கிய பாதை.... சலோ டெல்லி "

பிப்ரவரி 4, 1944 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்க புறப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு இடையே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய எழுச்சியுரை இது!

பாரத திருநாட்டை 200 ஆண்டுக் காலம் அடிமைத் தனையால் பிணைத்திருந்த #பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இராணுவ ரீதியாக போராடிய

ஈடிணையற்ற இந்தியத்தலைவர் ,
வங்கம் தந்த சிங்கம்
,பாரதத்தாயின் தவப்புதல்வன்,
மாவீரன் #நேதாஜி_சுபாஷ்_சந்திரபோஸ் அவர்களின் வீர வரலாற்றை படித்துப்பாருங்கள்

இந்திய விடுதலை போராட்டத்தின் இறுதி கட்டத்தில், இரண்டாவது உலகப் போர் ஏற்பட்டிருந்த அன்றைய உலக சூழலை கருத்தில் கொண்டு, சர்வதேச சக்திகளின் துணையுடன் அன்னிய மண்ணில் களம் அமைத்து அவர் நடத்திய விடுதலை போர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை கதிகலங்க அடித்தது.

காந்தியின் அகிம்சை என்ற அமைதி வழியில் போராடியதால்தான் இந்தியா சுதந்திரம் பெற்றது என்று கூறுபவர்கள் நேதாஜியின் ஆயுதம் தாங்கிய வீர வழியில் இந்தியாவிற்கு உள்ளேயும், இந்தியாவிற்கு வெளியேயும் இருந்து நடத்தப்பட்ட போராட்டங்களால் (போர்களால்) பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட கடும் நிர்பந்தங்களால்தான் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது என்ற வரலாற்று உண்மைகளை அறியாதவர்கள்.

இந்தியயர்களின் வீரத்தை உலகத்திற்கு உணர்த்தியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்!

தனது 23-வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து சுபாஷ் சந்திர போஸ், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தது சாத்வீக வழியில் போராடும் பாதையில் அடுத்த 20 ஆண்டுகளை செலவிட்டார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இரண்டு முறை (41 வயதிலேயே) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் சாத்வீகம் வெள்ளையருக்கு புரியாத மொழி என்பதை புரிந்து கொண்ட சுபாஷ் சந்திர போஸ், 1941 -ஆம் ஆண்டு தன்னை வீட்டுச் சிறை வைத்திருந்த பிரிட்டிஷ் அரசின் காவலை உடைத்து கல்கத்தாவில் இருந்து தப்பினார்.

ஆப்கானிஸ்தான், ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்றார்.

இரண்டாம் உலகப்போர் நடந்து கொணடிருந்த அந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு, ஜெர்மன்- இத்தாலி உதவியுடன் (ஹிட்லருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.) ஆயுத போரை துவக்க திட்டம் வகுத்தார்.போஸ்!

#இந்திய_தேசிய_ராணுவத்தின்_சுப்ரீம்_கமாண்டர்!

1943-ஆம் ஆண்டு அவருடைய கனவு நிறைவேறியது.

ஜெனரல் மோகன் சிங் தலைமையில் துவக்கப்பட்டு ஆனால் செயல்படாமல் சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் சுணங்கி கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு உயிர்கொடுத்தார்.(நேதாஜியின் படையில் 40,000 தமிழர்களை பசும்பொன் முத்துராமலிங்கதேவர் இணைத்தார்.)

1944-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி பர்மா தலைநகர் ரங்கூனில் இருந்து இந்தியாவின் கிழக்கு எல்லையை நோக்கி புறப்பட்டது இந்திய தேசிய ராணுவம்.

அடுத்த இரண்டு மாதங்களில் கொஹிமா கோட்டையையும், திம்பாம்பூர் - கொஹிமா சாலையையும் பிடித்தது. இந்திய தேசிய ராணுவத்தின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் பிரிட்டிஷ் படைகள் பின் வாங்கி ஓடின.

ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இம்பால் நகரை இந்திய தேசிய ராணுவம் சுற்றிவளைத்து தாக்கியது. ஒரு மாதம் இம்பாலை கைப்பற்ற கடும் போர் நடந்தது.

ஆனால் தென்மேற்கு பருவமழை பொழியத் தொடங்கியது. பொத்துக் கொண்டு கொட்டிய பெருமழையின் காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளம் இந்திய தேசிய ராணுவத்திற்கு பேரிழப்பை ஏற்படுத்தியது.

ஜூன் 27 ஆம் தேதி இம்பால் முற்றுகை கைவிடப்பட்டது. இந்திய தேசிய ராணுவம் பின்வாங்கத் தொடங்கியது. இந்திய தேசிய ராணுவத்தின் முதல் படையெடுப்பு தோல்வியடைந்தது.

பிரிட்டிஷ் ராணுவத்தின் படைபலம் அல்ல, பெருமழையும், வெள்ளமும், சேறும், சகதியும் இந்திய தேசிய ராணுவனத்தின் முதல் முயற்சியை முறியடித்தன.

ஆனால் தாக்குதல் தொடரும் என்றார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். "இம்பாலை மீண்டும் தாக்குவோம். ஒரு முறை, இரண்டுமுறையல்ல பத்து முறை... தொடர்ந்து தாக்குவோம்" என்று அறிவித்தார்.

ஆனால் அது நிறைவேறாமல் முடிந்தது. போரின் போக்கு மாறியது. ரங்கூனை நோக்கியும், சிங்கப்பூரை நோக்கியும் பிரிட்டிஷ் படைகள் நெருங்கின. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய தேசிய ராணுவத்திற்கு உறுதுணையாக இருந்த ஜப்பான் நேச நாடுகளிடம் சரணடைந்தது.

நேதாஜி சிங்கபூரை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தனது படைகளுக்கும், தெற்காசியாவில் தம் தாய்நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட இந்தியர்களுக்கும் சிறப்பு வானொலி வாயிலாக நேதாஜி இவ்வாறு உரையாற்றினார் :

"நமது சரித்திரத்தில் ஏற்பட்டுள்ள இந்த எதிர்பாராத சிக்கலான வேளையில் உங்களுக்கு ஒன்றை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த தற்காலிக தோல்வியால் துவண்டுவிடாதீர்கள். உங்கள் உணர்வுகளை தளரவிடாதீர்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் விதியில் கொண்டுள்ள நம்பிக்கையை இழக்காதீர்கள்.

இந்தியாவை அடிமைத் தளையிலேயே வைத்திருக்கும் சக்தி இந்த உலகில் எதற்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல...

விரைவில் இந்தியா விடுதலை பெறும். ஜெய்ஹிந்த்."

சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பின், நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு தேசப்பற்றை ஊட்டிய ஸ்ரீ அரவிந்தர் பிறந்த நாளான ஆகஸ்ட் 15-ஆம் தேதி, 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றது.

1897-ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள் 23-ஆம் நாள் ஒரிசா மாநிலம் கட்டாக்கில் பிறந்தார்.

தந்தை ஜானகிநாத், தாயார் பிரபாவதி போஸ்.

இளம் வயதிலிருந்தே கல்வி ஆர்வம் மிக்க சிறந்த மாணவராகத் திகழ்ந்த சுபாஷ் சந்திர போஸ், ஸ்ரீ ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் ஆன்மீக அழைப்புக்களால் ஈர்க்கப்பட்டார்.

சன்யாசத்தை மேற்கொள்ள முடிவெடுத்தார். `மக்கள் சேவையில் இறைவனை காண்' என்ற விவேகானந்தரின் அறிவுரையால் ஈர்க்கப்பட்டு அவ்வாறே பணியாற்றியும் வந்தார்.

ஸ்ரீ அரவிந்தர் எழுத்துக்கள் சுபாஷ் சந்திர போஸுக்கு தேசப் பற்றை ஊட்டியது மட்டுமின்றி, தேச சேவையிலும் நாட்டத்தை ஏற்படுத்தியது.

பின்னாளில் அவர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து தேச விடுதலை போராட்டத்தில் ஈடுபட, ஸ்ரீ அரவிந்தர், ஆர்யா எனும் தனது பத்திரிகையில் எழுதிவந்த கட்டுரைகளே காரணமாக அமைந்தது.

"உங்களில் சிலரை உன்னத மனிதர்களாக காண விரும்புகிறேன்; உங்களுக்காக அல்ல, இந்திய திருநாட்டை உன்னத நாடாக உயர்த்தும் உன்னத மனிதர்களாகவே காண விரும்புகிறேன். உங்களுடைய தாய்நாட்டின் சேவைக்காக உங்களை அர்ப்பணியுங்கள். அவளுடைய வளத்திற்காக செயலாற்றுங்கள், அவளுடைய இன்பத்திற்காக நீங்கள் துயரத்தை தாங்குங்கள்"

என்ற ஸ்ரீ அரவிந்தரின் வார்த்தைகள் சுபாஷின் உள்ளத்தில் தேசத்திற்காக பணியாற்ற வேண்டும் என்ற தீயை வார்த்தது.

1919 ஆம் ஆண்டு, தத்துவ பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்ற பின், ஐ.சி.எஸ். படிப்பிற்காக சுபாஷ் சந்திர போஸ் இங்கிலாந்து சென்றிருந்தபோது, பஞ்சாப் மாநிலம் அமிரித்சரில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது.

ஆனால் அந்த படுகொலை குறித்த செய்தி கூட உலகத்தின் காதுகளுக்கு எட்டாதவாறு பத்திரிகை தனிக்கையின் மூலம் செய்திகளை இரட்டடிப்புச் செய்தது பிரிட்டிஷ் அரசு.
சுபாஷும் அதனை அறியவில்லை.

#காங்கிரஸில்_இணைந்தார்!

ஐ.சி.எஸ். முடித்து 1921 ஆம் ஆண்டு, தனது 23 வது வயதில் மீண்டும் இந்தியா வந்த சுபாஷ் சந்திர போஸ், ஐ.சி.எஸ். அதிகாரியாக பணியில் சேரவில்லை. ஆனால் தேச விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்த காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார்.

ஜூலையில் இந்தியாவிற்குள் காலடி பதித்த சுபாஷ், ஆறே மாதத்தில் முதல் முறையாக சிறையில் அடைக்கப்பட்டார்.

வேல்ஸ் இளவரசரின் இந்தியா வருகையை புறக்கணிக்குமாறு காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளை ஏற்று, தனது அரசியல் குருவான சித்தரஞ்சன் தாஸுடன் (சி.ஆர். தாஸ்) நேரடி போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் சுபாஷ் சந்திர போஸ்.

அடுத்த 20 ஆண்டுகளில் 11 முறை பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

சுபாஷின் அறிவாற்றலும், அவருடைய திட்டமிட்ட தீவிர அரசியல் ஈடுபாடும் விடுதலை போராட்டத்திற்கு வேகமூட்டியது.

அவர் இந்திய மக்களால் மிகவும் நேசிக்கப் படும் தலைவராக மாறினார்.(இதனை விரும்பாத காந்தி நேதாஜியை தனது போட்டியாளராக கருதினார். அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தினர்.ஆனால் நேதாஜி வென்று காங்கிரஸ் தலைவரானார்)

டிசம்பர் திங்கள் 1928 ஆண்டு கல்கட்டாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், `முழு சுதந்திர'த்திற்கு குறைவான எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற தீர்மானத்தை சுபாஷ் கொண்டுவந்தார். ஆனால் காந்தியின் எதிர்ப்பு காரணமாக அந்த தீர்மானம் வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது.

#காங்கிரஸ்_தலைவரானார்_நேதாஜி

ஆனால் அடுத் த ஆண்டு (1929) லாகூரில் ஜவஹர்லால் நேரு தலைமையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் முழு சுதந்திர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் தலைவரானார் சுபாஷ் சந்திர போஸ்.

அடுத்த ஒன்பது ஆண்டுகள் சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய பணி இந்தியாவிலும், அயல் நாடுகளிலும் அவரை மாபெரும் தலைவராக உயர்த்தியது.

இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடி 1938 ஆம் ஆண்டு அவர் ஐரோப்பாவில் பயணம் செய்துக் கொண்டிருந்தபோது, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திர போஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

.ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் மாவீரன் உத்தம் சிங்.

அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி.

ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் போஸ்,

காந்திக்கும் போஸுக்கும் இடையிலான உரசலை இந்தச் சம்பவம் அதிகரித்தது.

1938 ல் கொல்கத்தாவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநாடு காந்தி தலைமையில் கூடியது.

சுயாட்சிக்கு எதிர்ப்பு காட்டிய காந்தியின் முடிவை எதிர்த்துப் பேச காங்கிரஸ் தலைவர்கள் தயங்கினர். கொல்கத்தா மாகாண தலைவரான போஸ் எழுந்தார் காந்தியின் முடிவு தவறு என எதிர்த்தார். காந்தி-போஸ் மோதல் ஆரம்பமானது.

காந்தியின் பல முடிவுகளை நேரடியாகவே எதிர்த்தார் போஸ். இதனால் திட்டமிட்டே காரிய கமிட்டியில் இருந்து போஸ் நீக்கப்பட்டார். அவரைப்போல் சென்னை மாகாணத்தை சேர்ந்த சீனிவாச அய்யரும் நீக்கப்பட்டார்.

1939 இல் சுபாஷ் சந்திர போஸ் இரண்டாவது முறையாகக் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.

போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், ஜவஹர்லால் நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார்.

அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார்.

"பட்டாபியின் தோல்வி என் தோல்வி" என்று பிரச்சாரம் செய்தார் காந்தி.

ஆனாலும், போஸ். 1,580 வாக்குகளுடன் வெற்றிபெற்றார்.

சீதாராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று வெளிப்படையாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்.

பட்டாபி சீதாராமையாவின் தோல்வி தனது தோல்வி என்று காந்தி கூறினார். இது நேதாஜியை வருத்தத்தில் ஆழ்த்தியது.

அதனால், அவரைச் சமாதானப்படுத்த போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

(மத்திய பிரதேச மாநிலம் திரிபூரியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், இந்தியாவிற்கு அடுத்த ஆறு மாதங்களில் பிரிட்டிஷ் அரசு முழு விடுதலை அளித்துவிட்டு வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற நேதாஜி முயன்றார். ஆனால் காந்தியால் அத்தீர்மானம் புறக்கணிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஃபார்வர்ட் பிளாக் (முற்போக்கு அணி) தொடங்கினார்.

அதன் அகில இந்திய தலைவராக நேதாஜியும்,தமிழக தலைவராக #பசும்பொன்_முத்துராமலிங்க_தேவர் உம் பதவியேற்று கொண்டனர்

ஃபார்வர்ட் பிளாக்கிற்கு காங்கிரஸ் கட்சிக்குள் செல்வாக்கு பெருகியது. நேதாஜியின் செல்வாக்கை ஒடுக்க காந்தி போராடினார்

காங்கிரஸ் கட்சியில் நேதாஜி எந்த பொறுப்பும் அடுத்த மூன்று ஆண்டுகள் வகிக்கக் கூடாது என தலைமை ஆணையிட்டது.

விதால்பாய் படேல் (வல்லபாய் படேலின் மூத்த சகோதரர். இவர் காந்தியை எதிர்த்தவர்.
நேதாஜியை நேசித்தவர்.

சுபாஷ் சந்திர போஸின் தேசப்பணிகளால் கவரப்பட்ட விதால்பாய் படேல் அவரது ரூ.1,20,000 மதிப்புடைய சொத்தை போஸின் தேசப்பணிகளுக்காக உயில் எழுதிவைத்திருந்தார் ஆனால் காந்திஜி அந்தத் தொகையை காங்கிரஸ் கட்சியின் விருப்பத்திற்கேற்பதான் செலவிட வேண்டும் என்றார்.

போஸ் மறுத்ததால் வழக்கு நீதிமன்றம் சென்றது. உயில் தெளிவாக இல்லாததால் போஸ் அந்தத் தொகையை இழந்தார்.காந்தி வென்றார்.

இதற்கிடையே, முன்கூட்டியே நேதாஜி குறிப்பிட்டது போல, செப்டம்பர் 1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் மூண்டது. வெள்ளையர் அரசை எதிர்த்து ஃபார்வர்ட் பிளாக் கடுமையாக பிரச்சாரம் செய்தது.(ஆனால் போரில் வெள்ளையருக்கு ஆதரவாக காந்தி பிரச்சாரம் செய்தார்.)

#ஜெர்மனியில்_நேதாஜி!

1940 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் நேதாஜி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும், இல்லையேல் பட்டினி கிடந்து சாவேன் என்று நேதாஜி எச்சரிக்கை விடுத்தார்.

தங்கள் சிறையில் நேதாஜி உயிர்விடுவதை விரும்பாத வெள்ளையர் ஆட்சி அவரை விடுவித்து, கொல்கட்டாவில் உள்ள அவரது வீட்டில், வீட்டுக்காவலில் வைத்தது.

அவருடைய வீட்டைச் சுற்றி கடும் கண்காணிப்பு போடப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சி போட்ட கட்டுக்காவலையும் மீறி, 1941 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் நேதாஜி தப்பினார்.

வீட்டுக் காவலில் இருந்து தப்பிய நேதாஜி எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. அடுத்த 12 வாரங்கள் சாலை வழியாகவும், ரயில் வழியாகவும், கார் வழியாகவும், இந்தியாவைக் கடந்து ஆப்கானிஸ்தான் வழியாக ரஷ்யா சென்ற நேதாஜி, ஆர்லாண்டோ மஸ்ஸோட்டா என்ற இத்தாலிய பெயரில் கடவுச் சீட்டுப் பெற்று பயணம் செய்து ஏப்ரல் மாதம் ஜெர்மன் தலைநகர் பெர்லினை அடைந்தார்.போஸ்!

ஜெர்மனியில் இருந்த `இந்தியாவின் நண்பர்கள்' துணை கொண்டு, சுதந்திர இந்தியா மையம் ((Freedom India Centre) என்ற அமைப்பினை பெர்லினில் நேதாஜி தொடங்கினார்.

அதற்கு குறைந்தபட்ச அரசு அங்கீகாரத்தையும் (Semi Diplomatic Status)ஜெர்மனி அரசிடமிருந்து பெற்றார்.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ராணுவ ரீதியிலான போராட்டம் நடத்த வேண்டும் என்ற தனது திட்டத்திற்கு வடிவம் கொடுக்கும் களமாகவே பெர்லினை பயன்படுத்தினார் நேதாஜி.

ஜெர்மன் அயலுறவுத் துறை அமைச்சகத்தில் பணியாற்றும் ஆடம் வான் டிராட் ஸு சோல்ஸ் என்பவர் நேதாஜிக்கு ஜெர்மன் அரசிடமிருந்து எதையெல்லாம் பெறமுடியுமோ, அத்தனையையும் - இந்திய விடுதலைக்காக பெற்றுத்தந்து உதவினார்.

சுதந்திர இந்தியா வானொலியை(Azad Hind Radio)பெர்லினில் இருந்து நேதாஜி துவக்கினார்.

ஆசாத் முஸ்லீம் ரேடியோ, தேசிய காங்கிரஸ் ரேடியோ என்ற பெயர்களிலும் வானொலிகளை நேதாஜி துவக்கினார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும், உலக போர் குறித்த செய்திகளையும் தான் இந்த வானொலிகள் ஒலிபரப்பின. நாஜி கொள்களை பாராட்டியோ, ஹிட்லரின் நடவடிக்கைகளை ஆதரித்தோ எந்த செய்திகளையும் பரப்பும் கருவிகளாக இந்த வானொலிகள் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மன் அயலுறவுத்துறை அமைச்சர் வான் ரிப்பன் டிராப்பை சந்தித்து பேசிய நேதாஜி, இந்திய தேசிய ராணுவம் அமைப்பதற்கு தேவையான நிதி, ஆயுத உதவிகளை ஜெர்மன் அரசு செய்யவேண்டும் என்றும், அதனை சுதந்திர இந்தியாவிற்கு வழங்கும் கடனாக ஜெர்மன் அரசு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அது ஒப்புக்கொள்ளப்பட்டது!

#ஹிட்லருடன்_சந்திப்பு!

அடுத்த ஆண்டு 1942, மே திங்கள் 29 ஆம் நாள் ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரை நேதாஜி சந்தித்துப் பேசினார். ஆனால் அந்த பேச்சுவார்த்தை முழுமையாக தோல்வியில் முடிந்தது.

உலக போர் முடிந்தவுடன் இந்தியாவை முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ள இத்தாலி, ஜப்பான், ஜெர்மன் நாடுகள் கூட்டாக உறுதியளிக்க வேண்டும் என்று நேதாஜி கேட்டுக்கொண்டார். அதனை இத்தாலி, ஜப்பான் நாடுகள் ஏற்றுக்கொண்டன. ஆனால் ஹிட்லர் மறுத்தார்.

இதனைத் தொடர்ந்து தனது நடவடிக்கைகளை, ஜப்பானின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சிங்கப்பூரில் இருந்து நடத்த நேதாஜி முடிவு செய்தார்.

#தெற்காசியா_திரும்பினார்!

1942 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி ஜெர்மன் நீர்மூழ்க்கிக் கப்பல் ஒன்றில் புறப்பட்ட நேதாஜி, மடகாஸ்கர் அருகே ஜப்பானின் நீர்மூழ்க்கிக் கப்பலுக்கு மாறி, மூன்று மாத பயணத்திற்கு பிறகு - இரண்டாவது உலகப் போர் உங்ச கட்டத்தில் நடந்துக்கொண்டிருக்கும் போது - மே 16 ஆம் தேதி டோக்கியோ வந்து சேர்ந்தார்.

டோக்கியோவிலிருந்து தெற்காசியாவில் வாழும் 30 லட்சம் இந்திய மக்களுக்கு வானொலி மூலமாக நேதாஜி தொடர்ந்து உரையாற்றினார்.

1942 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 2 ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்த நேதாஜி, ஒரு மாத காலத்திற்குள், ஜென்ரல் மோகன் சிங் தலைமையில் துவக்கப்பட்டு, ஆனால் செயலிழந்து கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தலைமையேற்றார்.

இந்திய தேசிய ராணுவத்தை பலப்படுத்தும் பணியில் முழு மூச்சாக இறங்கினார்.
போஸ்!

#இந்தியாவை_மீட்க_தாக்குதல்_தொடங்கியது!

1943 ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி சுதந்திர இந்திய அரசை சிங்கப்பூரில் நேதாஜி நிறுவினார்.

1944 ஆம் ஆண்டு தனது தலைமையகத்தை பர்மா தலைநகர் ரங்கூனுக்கு மாற்றிக்கொண்டார் நேதாஜி. இந்திய தேசிய ராணுவத்திற்கு நிதியுதவியும், பொருளுதவியும் தாராளமாக வழங்குமாறு நேதாஜி விடுத்த வேண்டுகோளை ஏற்று சிங்கப்பூர், மலேசியா, பர்மா நாடுகளில் வாழ்ந்த இந்தியர்கள் மனமுவந்து பெரும் அளவில் நிதியுதவி செய்தனர்.

1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி இந்திய - பர்மா எல்லையில் உள்ள அராக்கன் எனுமிடத்திலிருந்து இந்திய தேசிய ராணுவம் இந்திய எல்லையை நோக்கி நகரத் தொடங்கியது.

இந்திய எல்லையில் பிரிட்டிஷ் படைகளின் பெரும் எதிர்ப்புகளை முறியடித்து முன்னேறிய இந்திய தேசிய ராணுவம் மார்ச் 18 ஆம் தேதி இந்திய எல்லைக்குள் கால்பதித்தது.

இந்திய தேசிய ராணுவத்திற்கும், பிரிட்டிஷ் படைகளுக்கும் இடையே இந்திய - பர்மா எல்லைப் பகுதியில் 8 இடங்களில் கடும் போர் துவங்கியது.
ஏப்ரல் 14 ஆம் தேதி கர்னல் எஸ்.ஏ. மாலிக் தலைமையிலான படை, மணிப்பூரில் உள்ள மொய்ராங் எனுமிடத்தை கைப்பற்றி, அங்கு தேசியக் கொடியை பறக்கவிட்டது.

பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து, ராணுவ நடவடிக்கை மூலம் இந்திய தேசிய ராணுவம் கைப்பற்றிய முதல் பகுதி என்ற பெருமையை மொய்ராங் பெற்றது.

இதற்கிடையே ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி ஜப்பானிய அரசு உதவியுடன் ரங்கூனில் இந்திய தேசிய வங்கியை துவக்கி வைத்தார் நேதாஜி.

வரலாற்றுப் பெருமைமிக்க இந்நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவான ராணி ஜான்சி ரெஜிமண்டுடன் இந்திய எல்லையை நோக்கி புறப்பட்டார் நேதாஜி.

#இந்திய_தேசிய_ராணுவத்தின்_வெற்றிகள்!

ஏப்ரல் 8 ஆம் தேதி நாகாலாந்து மாநிலத்தின் இன்றைய தலைநகராக உள்ள கொஹிமா நகரம் இந்திய தேசிய ராணுவம் வசமானது.

அடுத்த சில நாட்களில் திம்மாப்பூர் - கொஹிமா முக்கிய சாலையை கைப்பற்றிய இ.தே.ரா. இம்பால் நகரை சுற்றி வளைத்து முற்றுகையிட்டது.இந்திய தேசிய ராணுவம் பர்மாவின் அரகான் காடுகள் மற்றும் அஸ்ஸாமில் பிரித்தானிய இந்திய ராணுவம் உள்ளிட்ட கூட்டுப்படைகளின் எதிர்ப்பைக் கண்டது, ஜப்பானியர்களின் 15 வது ராணுவத்துடன் இம்பால் மற்றும் கோஹிமாவை முற்றுகையிட்டது.

இந்தப் போரின்போது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானியர்களால் கைப்பற்றப்பட்டு இந்திய தேசிய ராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது; போஸ் அவற்றிற்கு ஷாகித் (தியாகம்) என்றும் சுவராஜ் (சுதந்திரம்) என்றும் பெயரிட்டார்.

ஒரு மாத காலம் இ.தே.ரா. சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலை சமாளிக்க முடியாமல் பிரிட்டிஷ் படைகள் பின்வாங்கத் துவங்கின.

ஆனால் தென் மேற்கு பருவமழை நிலையை தலைகீழாக மாற்றியது.

பொத்துக் கொண்டு கொட்டிய மழையினால் ஏற்பட்ட வெள்ளமும், அதன் காரணமாக சேறும், சகதியுமாகிவிட்ட பூமியும் துண்டிக்கப்பட்ட தகவல் தொடர்பும் இ.தே.ரா.வுக்கு பாதமாக முடிந்தன.

இந்திய தேசிய ராணுவத்தின் முதல் தாக்குதல் சில வெற்றிகளுக்குப் பின், தோல்வியில் முடிந்தது. மழைக்குப் பின் பரவிய காலரா, வயிற்றுப்போக்கு வியாதிகளுக்கு மருத்துவ வசதி கிட்டதாததால் இ.தே.ரா. வீரர்கள் நூற்றுக்கணக்கில் மடிந்தனர்.

ஆனால் நேதாஜி மனம் தளரவில்லை. இ.தே.ரா. படைகளும் துணிவோடு இருந்தன. உலகப் போரின் போக்கும் வெகு வேகமாக மாறத் தொடங்கியது.

பிரிட்டிஷ் தலைமையில் நேச நாட்டுப் படைகள் பர்மா - சிங்கப்பூர் நோக்கி வேகமாக நெருக்கத் தொடங்கின.

1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய பர்மா வரை பிரிட்டிஷ் படைகள் முன்னேறிவிட்ட செய்தி கிடைத்தது.

தனது சகாக்களின் வற்புறுத்தலுக்கு இணங்க ஏப்ரல் 24-ஆம் தேதி, ராணி ஜான்சி ரெஜிமண்ட் வீராங்கனைகளுடனும், தனது முதன்மை அமைச்சர்களுடனும் இ.தே.ரா.வின் மேஜர் ஜெனரல் ஸாமான் கியானியின் கட்டுப்பாட்டின் கீழ் ரங்கூனில் இருந்து பாங்காக் நோக்கி நேதாஜி புறப்பட்டார்.

ஒரு மாத காலம் எதிரிகளின் விமானத் தாக்குதல்களுக்கு இடையே கடும் இன்னல்கள் அனுபவித்தப் பின்னர் மே 14 ஆம் தேதி பாங்காக் வந்து சேர்ந்தனர்.

ஜூலை மாதம் மீண்டும் சிங்கப்பூர் வந்த நேதாஜி, இ.தே.ரா. அமைப்பு பணியில் ஈடுபட, மலேசியாவின் செராம்பன் நகருக்கு வந்தார்.

ஆனால் அடுத்தடுத்து கிடைத்த இரண்டு செய்திகள் நேதாஜியின் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தன.

1945, ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜப்பானின் மீது போர் தொடுப்பதாக ரஷ்யா அறிவித்தது. ஜப்பானின் கைவசம் உள்ள மன்ஞ்சூர்யாவை நோக்கி ரஷ்யப் படைகள் விரைந்தன.

தனது நோக்கத்திற்கு துணை நிற்கும் இரண்டு நாடுகளுக்கு இடையே போர். என்ன செய்வது? என்று சிந்தித்தார் நேதாஜி.

அடுத்த செய்தி ஆகஸ்ட் 12 ஆம் தேதி கிடைத்தது. சிங்கப்பூரிலிருந்து காரில் ஓடோடிவந்த டாக்டர் லக்ஷ்மையாவும், கணபதியும் ஜப்பானிய படைகள் நேச நாட்டு படைகளிடம் சரணடைந்துவிட்டதை நேதாஜியிடம் தெரிவித்தனர்.

என்ன செய்வது? பிரிட்டிஷ் படைகளிடம் இந்திய தேசிய ராணுவம் சரணடைவதா? அது முடியுமா? எந்த உதவியும் இன்றி எவ்வளவு நாள் போரிட முடியும்? இதற்கு பதில் காண நேதாஜி புறப்பட்டார்.

உடனடியாக, அன்று இரவே சிங்கப்பூர் திரும்பிய நேதாஜி, தனது அமைச்சரவை சகாக்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

அன்று இவ்வாறு முடிவெடுக்கப்பட்டது:

நேதாஜியை பிரிட்டிஷ் படைகள் கைது செய்து சிங்கப்பூரிலோ, அல்லது இந்தியாவிற்கு கொண்டு சென்று, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போர் தொடுத்த குற்றத்திற்காக தண்டித்தால் (மரண தண்டனை விதித்தால்) அது இந்தியாவிற்குள் பெரும் எழுச்சியை ஏற்படுத்தும். அதன் மூலம் விடுதலையும் சாத்தியமாகும். அவ்வாறின்றி நேதாஜியை சிறை வைத்தால், அது விடுதலை போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதற்கு உதவும். எனவே இ.தே.ரா. வீரர்களுடன் அதன் தலைமை தளபதியான நேதாஜியும் சிங்கப்பூரிலேயே இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அன்று இரவு சிங்கப்பூர் வந்த ஆசாத் ஹிந்த் அரசின் சட்ட ஆலோசகர் ஏ.என். சர்க்கார், நேத்தாஜியை பத்திரமாக காப்பாற்றி தங்களது கட்டுப்பாட்டிற்குள் உள்ள தற்பொழுது ரஷ்யா படையெடுத்து வரும் மன்ஞ்சூரியாவிற்கு நேதாஜியை பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டுவிட ஜப்பான் உத்தரவாதம் அளித்திருப்பதாக கூறினார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தை ரஷ்யாவின் உதவியுடன் நடத்தவேண்டும் என்கின்ற திட்டம் நேதாஜியிடம் ஏற்கனவே இருந்தது. ஆனால் அவர் ஆப்கானிஸ்தானில் இருந்தபோது, அங்கிருந்த ரஷ்ய தூதர் அவருக்கு ஒத்துழைப்பு தராததால், ஜெர்மன் சென்று அந்நாட்டின் உதவியை பெரும் முடிவை நேதாஜி எடுத்தார்.

மன்ஞ்சூரியாவை ரஷ்ய படைகள் கைப்பற்றிய பின்னர், இந்தியாவின் விடுதலைக்காக போராடும் தலைவனான தன்னை நிச்சயம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு கொண்டு செல்வார்கள். எனவே அங்கு அந்நாட்டு தலைமையை சந்தித்து, அவர்களின் ஆதரவைப் பெற்று மீண்டும் இந்திய தேசிய ராணுவத்திற்கு உயிரூட்ட திட்டமிட்ட நேதாஜி, மன்ஞ்சூரியா செல்ல முடிவு செய்தார்.

#இறுதிப்_பயணத்தை_நோக்கி!

ஆகஸ்ட் 15 ஆம் தேதி தனது அமைச்சர்களை கூட்டிய நேதாஜி, இ.தே.ரா. குறித்தும், ஜான்சி ராணி படை குறித்தும் முக்கிய கட்டளைகளைப் பிறப்பித்தார்.
நேச நாட்டு படைகளிடம் ஜப்பான் ராணுவம் சரணடைந்தது அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அன்று இரவு மலேசியா, சிங்கப்பூர், பர்மா ஆகிய நாடுகளில் வாழும் 30 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்களுக்கு ஆசாத் ஹிந்த் வானொலி மூலம் நேதாஜி - இறுதியாக - உரையாற்றினார்

."நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. . . விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!"

(அவர் அன்று உரையில் குறிப்பிட்டபடியே சரியாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆகஸ்ட் 15, 1947 ஆண்டு இந்தியா விடுதலை பெற்றது. அவர் விரும்பியவாறு அல்ல. . . இந்தியா - பாகிஸ்தானாக!)

இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு தனது உரையில் இவ்வாறு குறிப்பிட்டார் நேதாஜி.

"டெல்லிக்குச் செல்ல வழிகள் பல உள்ளது. டெல்லியே நமது நிரந்தர இலக்கு. மறந்துவிடாதீர்கள்."

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலை சிங்கப்பூரில் இருந்து பாங்காக் நோக்கி விமானம் மூலம் பயனமானார் நேதாஜி. சிங்கப்பூர் விமான தளத்தில் கண்ணீர் மல்க அவருக்கு வழியனுப்பி வைத்தனர்.
பாங்காங்கில் இருந்து சைகோன் புறப்பட்டுச் சென்றார் நேதாஜி. அவருடன் இ.தே.ரா. கர்னல் ஹபிபூர் ரஹ்மான், கர்னல் குல்சாரா சிங், கர்னல் பிரீதம் சிங், மேலும் அபித் ஹாசன், தேவ்நாத் தாஸ், எஸ்.ஏ. அய்யர் ஆகியோரும், ஜெனரல் இஸோடா, ஹக்கீயா, நெகிஷி ஆகிய ஜப்பானியர்களும் இரண்டு விமானங்களில் புறப்பட்டுச் சென்றனர்.

சைகோனில் சென்று இறங்கிய நேதாஜியை கொண்டு செல்ல ஜப்பானிய குண்டு வீச்சு விமானம் ஒன்று தயாராக இருந்தது. ஆனால் அதில் ஒருவருக்கு மட்டும் தான் இடம்தர முடியும் என்று ஜப்பானிய அதிகாரி ஒருவர் கூறினார். ஏற்றுக்கொள்வதா, தவிர்ப்பதா என்ற கேள்விக்கு விடைகாண தனது நண்பர்களுடன் நேதாஜி ஆலோசனை நடத்தினார்.

இறுதியில் நேதாஜி மட்டும் செல்ல ஒப்புக்கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில் மேலும் ஒருவருக்கு இடம்தர முடியும் என்று ஜப்பானியர்கள் கூற, கர்னல் ஹபிபூர் ரஹ்மான் உடன் செல்ல முடிவு செய்யப்பட்டது.

நேதாஜியும், ஹபூபும் மற்ற ஐவரையும் நோக்கி `ஜெய் ஹிந்த்' என்று முழக்கமிட்டுவிட்டு விமானத்திற்குள் சென்றனர். ஜப்பானிய விமானம் விண்ணில் எழும்பிப் பறந்தது.

நேதாஜியை சுமந்து கொண்டு பறந்த விமானம், சற்று நேரத்தில் அவர்களுடைய கண்களில் இருந்து விண்ணில் மறைந்தது. ஆனால் நேதாஜியும் இந்த மண்ணை விட்டு மறையப் போகிறார் என்பதை அவர்கள் அறியவில்லை. `ஜெய் ஹிந்த்' என்று கூறிவிட்டு நேதாஜி புறப்பட்ட அந்த பயணம் அவருடைய அவருடைய இறுதிப் பயணமாக ஆனது!

ஆகஸ்ட் 22 ஆம் தேதி, நேதாஜி பயணம் செய்த போர் விமானம் ஃபார்மோசா தீவுகளுக்கு அருகே விபத்திற்குள்ளானது என்ற ஜப்பானிய வானொலி அறிவித்தது.

ஜப்பான் வானொலியில் அவர்கள் கூறிய செய்தியை, இன்றுவரை எவரும் நம்பவில்லை.

என்ன ஆனார் நேதாஜி? இந்திய விடுதலைக்காக தனது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியையும் திட்டமிட்டு போராடிக் கழித்த அந்த மாபெரும் தலைவரின் நிலை இன்று வரை புரியாத புதிராகவே எல்லோருக்கும் இருந்து வருகிறது.

(சமீபத்தில் இந்திய அரசு வெளியிட்ட ஆவணங்களின் படி
  #நேருவின்_சூழ்ச்சியால் நேதாஜி #ரஷ்யாவில் சிறைவைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது)

தடங்கலான அனுப்புகைகள், ஜப்பானியர்களிடமிருந்து பெற்ற மோசமான ஆயுதங்கள் மற்றும் அளிப்புக்கள் மற்றும் பயிற்சி உதவியின்மை ஆகியவற்றால் இந்திய தேசிய ராணுவம் தோற்றுப்போயிருக்கலாம். போஸ் இறந்துவிட்டதாகக் கருதப்பட்டது முழு ஆஸாச் ஹிந்த் இயக்கத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்தது.

ஜப்பான் சரணடைந்ததைத் தொடர்ந்து இந்திய தேசிய ராணுவத்தின் துருப்புக்கள் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு ராஜதுரோக குற்றம் சாட்டப்பட்டனர்.

போஸின் துணிச்சலான நடவடிக்கைகளும் அடிப்படைவாத முன்முயற்சியும் அந்த நேரத்தில் இந்திய மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டியது. பிரித்தானிய பேரரசு கூட்டாளிகளாக கருதப்பட்ட பிரித்தானிய இந்திய போர்வீரர்கள் சொந்த நாட்டு விசுவாசமாகத் தூண்டுவதாகவும் அமைந்தது.

இந்திய இராணுவத்தினர் நேதாஜியின் உருவப் படத்தை வைத்து வழிபட்டனர் இந்திய தேசிய ராணுவத்தை எதிர்த்து போரிட மறுத்து கலகங்களும் நடைபெற்றன.

அதை எதிர்த்த பிரிட்டிஷ் அதிகாரிகள் தாக்கப்பட்டனர் இந்திய வீரர்களிடையே கட்டுப்பாட்டை பிரிட்டிஷ் அரசு இழந்தது...

அதன் தொடர்ச்சியாக ஏற்பட்டதே #இந்தியக்_கடற்படைக்_கலகம் (Royal Indian Navy Mutiny) ஆகும்.

இது பிரித்தானிய இந்தியாவின் கடற்படையில் பணிபுரிந்த இந்திய மாலுமிகள் பெப்ரவரி 18-20, 1946 காலகட்டத்தில் நடத்திய முழு வேலைநிறுத்தம் மற்றும் கலகத்தைக் குறிக்கிறது.

மும்பை கடற்படைத் தளத்தில் தொடங்கிய கலகம் விரைவில் பிற கடற்படைத் தளங்களுக்கும் கப்பல்களுக்கும் பரவியது. 78 கப்பல்கள் மற்றும் 20 கடற்கரைத் தளங்களைச் சேர்ந்த சுமார் 20,000 இந்திய மாலுமிகள் இக்கலகத்தில் ஈடுபட்டனர்.

மூன்று நாட்களில் கலகம் பிரித்தானியப் படைத்துறையால் அடக்கப்பட்டு விட்டாலும், இந்தியாவுக்கு விடுதலை வழங்க வேண்டும் என்று பிரித்தானியர்கள் முடிவு செய்ய இக்கலகம் முக்கியத் தூண்டுகோலாக இருந்தது.

(இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்து கைது செய்யப்பட்ட இந்திய போர்க்கைதிகள் சிலர் மீது பிரித்தானிய அரசு வழக்கு தொடுத்தது.

பிரித்தானியப் பேரரசருக்கு எதிராகப் போர் புரிந்ததாக தேச துரோக மற்றும் அரச துரோகக் குற்றம் சாட்டப்பட்ட அக்கைதிகள் சார்பில் பலர் வாதாடினார். இவ்வழக்குகள் இந்தியாவெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.

இந்திய மக்கள் அக்கைதிகளை புரட்சியாளர்களாகவும் விடுதலை வீரர்களாகவும் கருதியதால் பிரித்தானிய அரசின் மீது கடும் அதிருப்தி கொண்டனர். இந்த வெறுப்புணர்வு பிரித்தானிய இந்தியாவின் படைப்பிரிவுகளிலும் பரவியது.

பெப்ரவரி 18ம் தேதி இந்திய மாலுமிகளின் கலகம் வெளிப்படையாக வெடித்தது.

மும்பையில் நிறுத்தப்பட்டிருந்த சில கப்பல்களும் கடற்படைத் தளங்களும் கலகக்காரர்களின் கட்டுப்பாட்டில் வந்தன. கராச்சி, விசாகப்பட்டினம், கொச்சி போன்ற கடற்படைத் தளங்களுக்கும் விரைவில் கலகம் பரவியது. கலகக்காரர்கள் கலகத்தை ஒருங்கிணைக்க ஒரு நடுவண் வேலைநிறுத்தக் குழுவை அமைத்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக மும்பை நகரத்தில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தமும் கடைபிடிக்கப்பட்டது. பிரித்தானிய கடற்படைக் கொடி கப்பல்களிலிருந்து கடற்படைத் தளங்களிலிருந்தும் அகற்றப்பட்டது.

பிரித்தானிய அதிகாரிகள் பல இடங்களில் தாக்கப்பட்டனர்.

பெப்ரவரி 19ம் தேதி பிரித்தானிய ஆட்சியாளர்கள் கலகத்தை அடக்குவதற்கான முயற்சிகளைத் தொடங்கினர். கலகக்காரர்கள் கட்டுப்பாட்டிலிருந்த கப்பல்களும் தளங்களும் ஒன்றன்பின் ஒன்றாக சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட்டன.

கலகத்தால் சட்ட ஒழுங்கும், சமூகக் கட்டுப்பாடும் சீர்குலைந்து போகுமெனக் கூறி ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகவும்,இந்திய விடுதலை புரட்சிக்கு எதிராகவும் காந்தியின் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் கலகத்துக்கு வெளிப்படையாக ஆதரவளிக்க மறுத்து விட்டது.

பெப்ரவரி 20ம் தேதி கலகம் முற்றிலுமாக அடக்கப்பட்டு கலகக்காரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
பம்பாய் கலகம் தோல்வியில் முடிவடைந்தாலும் காலனிய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1942ம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு கிளர்ச்சியை இந்தியப் படைகளின் துணை கொண்டே மூன்றே மாதங்களில் பிரித்தானிய அரசு அடக்கியிருந்தது.

இந்தியப் படைகளிடையே விடுதலை இயக்கத்துக்கு ஆதரவு பெருகி விட்டதால், இனியொரு முறை பெரும் கிளர்ச்சி ஏற்பட்டால் முன்போல செயல்படுவார்கள் என நம்ப முடியாது என்று பிரித்தானிய ஆட்சியாளர்கள் உணர்ந்தனர். இவ்வாறு இந்தியர்களுக்கு தன்னாட்சி வழங்க இக்கலகம் ஒரு தூண்டுகோலாக அமைந்தது.

கல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.வி.சக்ரபர்த்தி பிரிட்டிஷ் பிரதமரிடம் எடுத்த பேட்டி பற்றி அவர் கூறியது இது

"நான் அங்கிருந்தபோது, போருக்குப் பிந்தைய பிரித்தானிய பிரதம மந்திரியாக இருந்த கிளைமண்ட் #அட்லி இந்தியாவின் சுதந்திரத்திற்கு பொறுப்புடையவராக இருந்தார்,

இந்தியாவிற்கு வருகைபுரிந்த அவர் கல்கத்தா ராஜ் பவனில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார்.

நான் அவரிடம் நேரடியாகவே இவ்வாறு கேட்டேன்:

'#காந்தியின்_வெள்ளையனே_வெளியேறு_இயக்கம் 1947 க்கும் வெகுமுன்னரே தோற்றுப்போய்விட்டது,
வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கப்பட்ட மூன்று மாதங்களிலேயே ஒடுக்கப் பட்டது. எனவே அதன்
பிறகு

பிரிட்டிஷார் இந்தியாவைவிட்டு வெகு விரைவாக வெளியேற வேண்டும் என்கிற அளவிற்கு இந்தியச் சூழ்நிலையில் எதுவும் இல்லை. பிறகு ஏன் அவர்கள் அப்படிச் செய்தார்கள்?’

அதற்கு பதிலாக அட்லி சில காரணங்களைக் குறிப்பிட்டார்,

அதில் முகமுக்கியமானது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தின் நடவடிக்கைகள்,

அது இந்தியாவில் பிரித்தானிய பேரரசின் அடித்தளத்தை ரொம்பவே பலவீனப்படுத்திவிட்டது,

அத்துடன் ஆர்ஐஎன் கலகத்தினால் பிரிட்டிஷாருக்கு இந்திய ஆயுதப் படைகள் இனிமேலும் நம்பிக்கைக்கு உகந்ததாக இருக்காது என்பதை பிரிட்டிஷார் உணர்ந்துவிட்டனர்.

மகாத்மா காந்தியின் 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேறுவது என்ற முடிவில் எந்த அளவிற்கு செல்வாக்கு செலுத்தியது என்று நான் கேட்டபோது,

அட்லி தனது உதடுகளை விரித்து ஒரு புன்முறுவலுடன் உற்று நோக்கியபடி மெதுவாகச் சொன்னார்,

'மிகவும் குறைவு'."

   இதுவே கல்கத்தா நீதிபதி பி.வி.சக்ரபர்த்தியிடம் பிரிட்டிஷ் பிரதமர் அட்லி அளித்த பேட்டியாகும்.

எனவே  மறைக்கப்பட்ட வரலாற்று  உண்மை இதுதான்

'இந்தியா காந்தியின் அகிம்சையால் மட்டும் சுதந்திரம் பெறவில்லை.

  ஆயுதம் ஏந்திப் போரிட்ட ஆயிரம் ஆயிரம் இந்திய இளைஞர்களின் தியாகத்தாலும் ரத்தத்தாலும் எழுதப்பட்டதுதான் இந்தியாவின் விடுதலை வரலாறு.

#வாழ்க_பாரதம் ! #வந்தே_மாதரம் ! #ஜெய்ஹிந்த்!