Thursday 29 March 2018

தேவர் வாக்குமூல பேச்சு சாரம்சம்

என்னைப் பொறுத்தவரை நான் சமாதானத்திற்காக ஒவ்வொரு மூச்சையும் செலவிட்டு இருக்கிறேன்.-#பசும்பொன்_தேவர்

சாதி வெறியைக் கிளறிவிட்டோ, கலவரத்தைத் தூண்டிவிட்டோ நாட்டின் பாதுகாப்புக்குக் கேடு விளைவிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. அதிலும் முதுகுளத்தூர் பிராந்திய ஜன ஒற்றுமையில் எனக்கு அக்கறை அதிகம். ஏனெனில், கடந்த இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்குப் படுதோல்வியைக் கொடுத்த தொகுதி அது. -#பசும்பொன்_தேவர்

சமாதான சாத்தியத்திலும், எல்லா இன மக்களின் ஐக்கியத்திலும் எனக்கு இதரரை விட அதிக கவனம் உண்டு. -#பசும்பொன்_தேவர்

எவ்விதத் துன்பம், எவரால் கொடுக்கப்பட்டாலும், அதற்கு மாற்று வழி சட்டப் பாதையேயன்றி சண்டை அல்ல. - #பசும்பொன்_தேவர்

எந்த வகையிலும் அமைதி இழந்து விடாதீர்கள், அமைதியோடு இருங்கள். வகுப்பு நெறி எந்த ரூபத்தில் வந்து மோதினாலும், அதில் சிக்கி விடாதீர்கள். எது வந்தாலும் அமைதியை இழந்து விடக்கூடாது”

பலாத்காரத்தில் யார் ஈடுபட்டாலும் எனது இதயத்தைப் பிளந்து அதிலிருந்து சொட்டும் உதிரத்தைக் குடித்த பாவியாவார்கள்”

நான் குற்றம் புரிந்தவனுமல்ல; புரிபவனும் அல்ல.

Sunday 25 March 2018

தேவர் மரணம் - மாலைமலர்

உண்மை துறவி தேவர் திருமகன்

மாலைமலர் முத்துராமலிங்கதேவர் மரணம்  செய்தி சுவடுகள் பகுதியில்
மீண்டும் வெளிவந்ததது

மாபெரும்
தலைவரும், நேதாஜியின் நண்பரும்,
சிறந்த பேச்சாளருமான பசும்பொன்
முத்துராமலிங்க தேவர் மதுரையில்
தமது 56_வது வயதில் காலமானார்.
கடந்த 2 ஆண்டு காலமாக உடல் நலம்
இல்லாமல் இருந்த தேவர், முதலில்
மதுரை ஆஸ்பத்திரியிலும் பின்னர்
வேலூர் ஆஸ்பத்திரியிலும்
சிகிச்சை பெற்றார்.

சிறுநீரகக் கோளாறுக்காக அவர்
அறுவை சிகிச்சை செய்து கொள்ள
வேண்டும் என்று வேலூர் டாக்டர்கள் யோசனை தெரிவித்தனர். ஆனால்
தேவர் மறுத்துவிட்டார். மதுரையை அடுத்த திருநகரில் உள்ள அவர்
வீட்டில் தங்கி, நாட்டு மருந்துகளை மட்டும் சாப்பிட்டு வந்தார்.
உடல் நிலை மோசம் அடைந்தது. அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் மிகவும்
முயன்றும் பலன் இன்றி, 1963 அக்டோபர் 29 அதிகாலை 4.50
மணிக்கு (பிறந்த நாளுக்கு ஒரு நாளுக்கு முன்) காலமானார். "என்
உடலை, சொந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் அடக்கம்
செய்யவேண்டும்" என்று இறப்பதற்கு முன் தேவர் விருப்பம்
தெரிவித்திருந்தார்.

அதன்படி, மதுரையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள
பசும்பொன் கிராமத்துக்கு (ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர்
தாலுகா) தேவரின் உடல் கொண்டு போகப்பட்டது. தேவர் மரணம்,
தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும்
ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்
பல்லாயிரக்கணக்கானவர்கள் பசும்பொன் கிராமத்துக்கு வந்து கண்ணீர்
அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலம், 30_ந்தேதி காலை 11
மணிக்கு புறப்பட்டது. ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள்
கலந்து கொண்டனர்.

தி.மு.கழகத் தலைவர் அண்ணா, அமைப்புச் செயலாளர் என்.வி.நடராசன்,
அன்பழகன், நடிகர்கள் எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ராஜேந்திரன்,
டி.வி.நாராயணசாமி, சட்டசபை உறுப்பினர்கள் சசிவர்ணதேவர்,
சீமைசாமி, தமிழ்நாடு சுதந்திரா கட்சித் தலைவர் சா.கணேசன்,
எஸ்.எஸ்.மாரிசாமி, மூக்கைய தேவர், அன்பில் தர்மலிங்கம் மற்றும் பலர்
ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

ஊர்வலம், தேவரின் தோட்டத்தை அடைந்தது. அங்கு உடல் அடக்கம்
செய்யப்பட்டது. அங்கே நடந்த அனுதாபக் கூட்டத்தில்,
அனைத்துக்கட்சியினர் பேசினார்கள்.

அண்ணா பேசுகையில் கூறியதாவது:_

"தேவரை இழந்தது எனக்கு தாங்க முடியாத வேதனை அளிக்கிறது.
தென்பாண்டி மக்களின் இதயத்தைக் கவர்ந்த தலைவர் அவர்.
எது எது மக்களுக்குத் தேவையோ, அவைகளையெல்லாம் வீரத்தோடும்,
அஞ்சா நெஞ்சத்தோடும் எடுத்துச் சொன்னார்.
ஒருமுறை சட்டசபையில் அவரைப் பாராட்டி நான் பேசினேன்.
"உங்களைத் திட்டும் தேவரை நீங்கள் பாராட்டலாமா?" என்று சிலர்
கேட்டார்கள். "அவர் செய்யும் நல்ல செயல்களை எடுத்துச்
சொல்லாவிட்டால் என் மனச்சாட்சிக்கு துரோகம் செய்தவன் ஆவேன்"
என்று பதில் அளித்தேன்."
இவ்வாறு அண்ணா கூறினார்.

தேவர் மறைவு குறித்து, காமராஜர் விடுத்த அனுதாபச் செய்தியில்,

"தேவர் மரணம் குறித்து மிகவும் வருந்துகிறேன். சுதந்திரப்
போராட்டத்தில், வீரத்துடன் ஈடுபட்டார். மனதில் சரி என்று பட்ட
கொள்கையை தைரியத்துடன் சொல்லக்கூடியவர்"
என்று குறிப்பிட்டு இருந்தார்.

சுதந்திரா கட்சித் தலைவர் ராஜாஜி விடுத்த செய்தியில்,
"நேர்மை,
பக்தி, தைரியம் ஆகி யவை ஒரு தனி மனிதனை நன்கு பிரகாசிக்கச்
செய்யும். அந்தப் பண்புகளைக் கொண்டவர் முத்துராமலிங்க தேவர்.
அதனால் அவர் புகழுடன் பிரகாசித்தார்" என்று கூறியிருந்தார்.

முத்துராமலிங்கதேவர், 1908_ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30_ந்தேதி,
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னை அடுத்த புளிச்சுகுளம் என்ற
கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் உக்கிரபாண்டியத் தேவர் _
இந்திராணி அம்மாள்.

பிறந்த ஆறாவது மாதத்திலேயே தாயாரை இழந்த தேவர், பாட்டியின்
ஆதரவில் வளர்ந்தார். 1927_ம் ஆண்டில் முத்து ராமலிங்க தேவர்
காங்கிரசில் சேர்ந்தார். சுதந்திரப் போராட் டத்தில் கலந்து கொண்டு,
சிறை சென்றார். வெள்ளைக்காரர்களை எதிர்த்து நேதாஜி சுபாஷ்
சந்திரபோஸ் படை திரட்டியபோது, அவருக்கு ஆதர வாக தீவிர பிரசாரம்
செய்தார்.

அப்போது 5 ஆண்டு ஜெயில் தண்டனை அடைந்தார். 1948_ம் ஆண்டில்,
காங்கிரசை விட்டு விலகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துவக்கிய
பார்வர்டு "பிளாக்" கட்சியில் சேர்ந்தார். முத்துராமலிங்க தேவர், நீண்ட
காலம் சட்டசபை உறுப்பினராக இருந்திருக்கிறார்.

1937_ம் ஆண்டு முதுகுளத்தூர் தொகுதியில் இருந்து தமிழ்
நாடு சட்டசபைக்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
பிறகு 1947_ம் ஆண்டு மீண்டும்
தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.
1952_ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில்
சட்டசபைக்கும், பாராளுமன்றத்துக்கும் (2 தொகுதிகளில்)
காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டார். இரண்டிலும்
வெற்றி கிடைத்தது. அதில் பாராளுமன்ற உறுப்பினர்
பதவியை ராஜினாமா செய்தார்.

பிறகு 1957_ம் ஆண்டு பொதுத்தேர்தலில்
தமிழ்நாடு சட்டசபைக்கு முதுகுளத்தூர் தொகுதியிலும்,
பாராளுமன்றத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியிலும்
போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்று, சட்டசபை உறுப்பினர்
பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த 1962 பிப்ரவரி மாதம் நடந்த பொதுத்தேர்தலில்,
அருப்புக்கோட்டை தொகுதியில்
இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.

நேதாஜியும்,
முத்துராமலிங்க தேவரும் சகோதர பாசம் கொண்டிருந்தனர். 1939_ம்
ஆண்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக
நேதாஜி தேர்ந்து எடுக்கப்பட்டபோது, அவர் வெற்றிக்கு தேவர்
உழைத்தார்.

கல்கத்தாவில் நடந்த விழாவுக்கு, தேவரை நேதாஜி அழைத்தார்.

"முத்து ராமலிங்கம், என் தம்பி" என்று கூட்டத்தினருக்கு அறிமுகம்
செய்தார். தேவரைக் கட்டித்தழுவி, "நான் வடநாட்டு போஸ்; நீ
தென்நாட்டு போஸ்" என்று வாழ்த்தினார்.

1957 செப்டம்பர் மாதத்தில்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இரு சமூகத்தைச்
சேர்ந்தவர்கள் இடையே கலவரம் நடந்தது.
அப்போது ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த இமானுவேல்
கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், முத்துராமலிங்கதேவரும்
குற்றம்சாட்டப்பட்டார். முடிவில்,
நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார்

  பத்தாம் வகுப்பு வரை படித்த தேவர், ஆங்கிலத்திலும், தமிழிலும்
மணிக்கணக்கில் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவர்.
தமிழ் நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

விடுதலைப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றார். அவர் வாழ்ந்த
நாட்கள் 20,075. அதில் சிறையில் கழித்த நாட்கள் 4,000. ஜமீன் பரம்பரையில்
பிறந்தாலும், எளிய வாழ்க்கை நடத்தினார்.

33 கிராமங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும், வருமானத்தில் பெரும்
பகுதியை ஏழை மக்களுக்காக செலவிட்டார்.
பொதுத்தொண்டு செய்வதை முழு நேரப்பணியாக மேற்கொள்ள
விரும்பி திருமணம் செய்து கொள்ளாமல் துறவிபோல் வாழ்ந்தார்.

www.maalaimalar.com/.../muthuramaling...

Wednesday 14 March 2018

விபூதி வீரமுத்து சுவாமிகள்

      விபூதி வீரமுத்து கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் பகுதியில் இருந்தவர். தேவர் சமூகத்தினை சேர்ந்தவர்.
                ஈவேரா தமது காலத்தில் ராமர் படத்தினை சேர்ப்பால் அடித்து ஹிந்து வெறுப்பை காட்டியபோது. எதிர்த்து கேள்வி கேட்ட ஆண் மகன். 
     ஈவேரா கும்பல் தங்களுக்கே உள்ள பகுத்தறிவுடன்... “ என் பணத்தில் நான் காசுகொடுத்து வரைந்த படத்தினை எனது செருப்பால் நான் அடிப்பதில் என்ன தவறு? இதை கேட்க நீயார் ? என விபூதியை கேட்டனர்.

  மறுதினம் ...

      அதே இடத்தில்  ஈவேராவின் படத்தினை வரைந்து அதை செருப்பால் அடித்தார் வீபூதி வீரமுத்து ...
     கேள்விகேட்டு கோபத்துடன் வந்த ஈவேரா அண்ட் கோ வுக்கு அவர்கள் பாணியிலேயே பதில் சொன்னார் வீபூதி வீர முத்து
     என் பணத்தில் நான் காசுக்கொடுத்து வரைந்த படத்தினை எனது செருப்பால் அடிப்பதில் என்ன தவறு இதை கேட்க நீயார் ?
     ஈவேரா கும்பலுக்கு பதில் சொல்ல முடியவில்லை...

   கருப்புக்கு ஒரு மறுப்பு போன்று பல நூல்களை எழுதி பதிப்பித்து நாஸ்திக அராஜக கும்பலுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் வீபூதி வீரமுத்து.
     சிலம்புச்செல்வர் ம.பொ.சி அவர்கள் திராவிட எதிர்ப்பு மாநாடு நடத்தியபோது அதில் கலந்துகொண்டு சிறப்பித்தவர்.

     விபூதியின் நூல்கள் அடுக்கு மொழியில் துணிவுடன் கடுமையாக  திராவிட கழகத்துக்கு அதன் தலைமைக்கு சவுக்கடி கொடுத்து வந்தது.

தேவர் பாராளுமன்றம் உரையின் சாரம்சம்

தேவரின் பாராளுமன்றம் உரையின் சாரம்சம்

அகிம்சை என்ற தத்துவம் சிந்திப்பதிலும், பேசுவதிலும் உள்ள எளிமை, அதை நடைமுறைப்படுத்துவதில் இல்லை . -#பசும்பொன்தேவர்

எந்தக் கொள்கையும், எந்தச் சமயத்திலும் செயலோடு சம்பந்தப்பட வேண்டும். செயலோடு சம்பந்தப்படும் கொள்கையைத்தான் உருவாக்கவும் வேண்டும். பேசுவதற்குக் கொள்கை, செய்வதற்கு வேறு முறை என்றால் அக்கொள்கை வெறும் பிரச்சார அந்தஸ்தோடு நின்றுவிடும். அதற்குச் சாகாத்தன்மையும் ஏற்படாது

ஐ.நா.வின் சமாதானம், அமைதி எல்லாம் பேச்சோடு சரி - அதன் செயல்களெல்லாம் அமைதியை சிதைப்பதிலேயே போய்க் கொண்டிருக்கிறது

லோக்சபையிலே தன் பக்கம் மெஜாரிட்டி இருக்கிறதென்ற துணிச்சலில் தேசம் சம்பந்தப்பட்ட எதையும் சுயமூப்பில் செய்வது நல்லதா?

பொறுப்புள்ள பெரிய மனிதர்களை மதித்து மரியாதை செய்யலாம். ஆனால் அவர்கள் மூத்தவர்கள் என்பதற்காக உயிரினுமினிய கொள்கைகளைத் தியாகம் செய்ய முடியுமா?

இந்தியா பாக்கிஸ்தான் எல்லைப் பிரச்சனை, இன்றோ ஒரு நாளைய விவகாரமாகவும் இல்லை - நித்தியப் பிரச்சனையாகி வருகிறது

உண்மையில் நமது பாதை அகிம்சைதான் என்றால் இத்தனை கோடி ரூபாய்களை விழுங்கும் ராணுவ பட்ஜெட் ஏன்? அவ்வளவு பெரிய தொகையை தேசிய நலத்திட்டம் போன்ற பல உருப்படியான காரியங்களுக்குச் செலவிடலாகாதா?

ராஜதந்திரம் என்றால் அதற்கொரு சாமுத்திரிகம், நாகரிகம் கண்ணியம் உண்டு. இம்மூன்றும் இல்லாத ராஜதந்திரத்துக்கு, ராஜதந்திரம் என்ற பெயரை வேண்டுமானால் சூட்டலாம். ஆனால் அது ராஜதந்திரமாகாது.

நினைக்கவே இனிக்கும் அற்புதம் பெற்ற தத்துவத்தை நாம் வாயில் வைத்திருக்கத் தவறவில்லை. ஆனால், அதைச் செயலுக்கு இறக்கிவிட நாம் விரும்பவே இல்லை; ஜனநாயகத்தின் தரத்தை நாம் ஒரு அளவுக்கேனும் கையாளாது போனாலும் பாதகமில்லை - போகட்டும் - ஆனால் மனித குலத்திற்கு வேண்டிய மனிதத் தரத்தையாவது மடக்கிச் சாய்க்காமல் விட்டுவிட்டால், அதுவே ஒரு பெரும் சேவையும், தியாகமும், புண்ணியமுமாகும்.

ஜனநாயகத் தத்துவத்தைப் பேச்சால் குளிப்பாட்டுகிற நாட்டில் மனிதத் தரத்திற்கே வாய்ப்பில்லை

ஜனநாயகத்தையாவது உங்கள் நோக்கம் போல் எப்படியும் உபயோகித்துக் கொள்ளுங்கள் - மனிதத் தரத்தையாவது கசக்கிக் கன்னவைக்காமல் விடுங்கள்

கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் - இயல்பு. ஆனால் தேசத்தைப் பற்றிய விஷயங்களில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்புண்டு.

கொள்கை பலம் எல்லோருக்குமே உண்டு. கருத்துக் கொள்ளும் உரிமையுமுண்டு. இதை மறந்தோ, மறுத்தோவிட்டு ஒரு உறுப்பினர், இந்து மத்தின் நேர்மை குறித்துப் பேசினால் நீங்கள் அவரை வகுப்புவாதி என்று இலேசாகச் சொல்லி ஒதுக்கிவிடுகிறீர்கள், மற்றொரு உறுப்பினர் முன்வந்து பொருளாதாரத் தத்துவம் பற்றிக் கூறினால், அவரை உங்கள் வாயால் கம்யூனிஸ்ட்டாக்கி விடுகிறீர்கள், வேறொருவர் வேறேதேனும் சொல்லத் துணிந்து முயன்றால், அவரை ஏதேனும் ஒரு கமிட்டிக்குப் பொறுப்புக் கொடுத்து, குல்லாய் மாட்டி உள்ளே இழுத்துக் கொள்கிறீர்கள். இவ்வளவு மோசமான போக்கைக் கொண்டிருந்தால் சக்தி மிக்க எதிர்க்கட்சி எப்படி உருவாகும்?  ஒருக்காலும் முடியாது!

நமது ராணுவம் பாகிஸ்தானுக்குச் சரியான பதில் சொல்லும் என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வதில் உள்ள சக்தி, விஷயத்தில் இல்லை

அரசியல் தலைவர்கள் லஞ்சத்தையும், சலுகையையும் வியாபாரம் செய்யும் வியாபாரிகளாகி வருகிறார்கள்.

தேசப் பிரச்சனை, அரசியல் தலைவர்களின் லஞ்ச லாபத் தொழலாக மாற்றப்பட்ட மோசமான காலமாவிட்டது. 

நகர்ப்புறங்களில் வாழுகிறவர்கள், இயன்றவரை பணத்தையோ, உடைமைகளையோ திரட்டலாம் - சேமிக்கலாம் - எவ்வளவு செல்வத்தோடும் சுகிக்கலாம் - என்று அனுமதித்துவிட்டு, கிராமப்புறங்களில் வாழுவோர்களின் நிலங்களுக்கு மட்டும் உச்சவரம்பு கட்டப்போனால், உங்கள் திட்டத்திலும் அதைச் செய்யத் தூண்டிய எண்ணத்திலும் சமநிலை இல்லை என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படும் என்பதோடு, நமது நாட்டுக்குச் சொந்தமான மொத்த மக்களில் 80 சதவிகிதம் பேரை 20 சதவிகிதம் பேருக்கு அடக்கமாக்குகிறீர்கள் என்றுதான் பொருள்படும்.

பொறுப்பின்றியும், சரியான காலநிலை தவறியும் பேசி வைக்கும் இடதுசாரியும் இருக்கிறார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதற்காக வலதுசாரிகள் மனத்திற்குத் தோன்றியதைச் செய்து, நாட்டை ஆபத்தின் வயப்படுத்திவிடாதீர்கள்

Monday 12 March 2018

சோமப்ப சுவாமிகள்

🌹சோமப்ப சுவாமிகள்🌹

திருப்பரங்குன்றத்தில் காகபுசுண்டர் மலை எனப்படும் திருக்கூடல் மலையின் உச்சியில் பிரதான தெய்வமாக ஸ்ரீதண்டாயுதபாணி பிரதிஷ்டை ஆகி உள்ளார். கீழே- அதாவது அடிவாரத்தில் மாயாண்டி சுவாமிகளின் திருச்சமாதியையும் இன்ன பிற தெய்வங்களின் சந்நிதிகளையும் தரிசிக்கலாம்.

மாயாண்டி சுவாமிகள் திருச்சமாதியை வணங்கி விட்டு, தண்டாயுதபாணி ஸ்வாமி சந்நிதியைத் தரிசிக்க திருக்கூடல் மலையில் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் மீது ஏறி நடந்தால், முதலில் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் தரிசனம். இதை அடுத்துச் சிறிது தொலைவு நடந்தால், சோமப்பா சுவாமிகளின் ஜீவ சமாதியைத் தரிசிக்கலாம். மிக அற்புதமான சித்த புருஷர் என்று மாயாண்டி சுவாமிகளால் அடையாளம் காணப்பட்டவர் சோமப்பா சுவாமிகள். தரை மட்டத்தில் இருந்து சுமார் ஐம்பதடி உயரத்தில் சோமப்பாவின் சமாதி அமைந்துள்ளது. அமைதி தவழும் ரம்மியமான சூழ்நிலை. தியானம் செய்பவர்களுக்கு ஏற்ற இடம்.

பலிபீடம், நந்திதேவர், லிங்கத் திருமேனி பிரதிஷ்டை, பிராகாரம் என்று சோமப்பா சுவாமிகள் திருச்சமாதி முழுமையான அமைப்புடன் காணப்படுகிறது. கருவறையில் லிங்கத் திருமேனியுடன் சோமப்பா சுவாமிகளின் திருவுருவப் படமும் உள்ளது. சுவாமிகளின் அபிமானத்துக்கும் ஆசிர்வாதத்துக்கும் உள்ளான மதுரை பக்தர்கள். தினமும் இவரது திருச்சமாதிக்கு வந்து தியானம் மேற்கொள்கிறார்கள். தங்கள் குருநாதரைத் தொழுதுவிட்டு அன்றாடப் பணிகளைக் கவனிப்பவர்களும் இருக்கிறார்கள்.

சோமப்பா சுவாமிகளின் இயற்பெயர் எவருக்கும் தெரியாது. தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்கள் உட்பட அனைவரையும், சோமப்பா.......சோமப்பா என்றே அழைப்பார் இவர். இதனாலேயே சோமப்பா சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.

சோமப்பா சுவாமிகளின் ஆசிர்வாதத்தைப் பரிபூரணமாகப் பெற்ற உள்ளூர் பக்தர்கள் பலர். சுதந்திரப் போராட்டக் காலத்தின் போது பசும்பொன்முத்துராமலிங்கத் தேவர். மாதம் இரு முறை இந்த மலைக்கு வருவது வழக்கம். சோமப்பா சுவாமிகளின் தீவிர பக்தர் அவர். சுவாமிகளை நேருக்கு நேர் பார்த்துப் பேசி அவரை வணங்கி, ஆசி பெற்றவர் தேவர். சோமப்பா சுவாமிகள், பக்தர்களுக்குத் தரிசனம் தந்து கொண்டிருக்கும் இடத்திலேயே ஒரு மூலையில் அமர்ந்து தியானம் மேற்கொள்வார் முத்துராமலிங்கத் தேவர். சோமப்பா, போ....போ என்று ஓங்கிய குரலில் சுவாமிகளிடம் இருந்து உத்தரவு வரும் வரையில் கடும் தியானத்தில் இருப்பார் முத்துராமலிங்கத் தேவர். இந்த உத்தரவு சோமப்பாவின் திருவாயில் இருந்து வந்தவுடன், சந்தோஷத்துடன் தியானத்தை முடித்துக்கொண்டு, சாஷ்டாங்கமாக அவரை நமஸ்கரிப்பார் தேவர். அதன் பின், சுவாமிகளின் ஆசி தனக்குக் கிடைத்து விட்ட திருப்தியுடன் சந்தோஷமாக அங்கிருந்து நகர்வாராம் முத்துராமலிங்கத் தேவர்.

கலைமாமணி மதுரை சோமு, நாதஸ்வரக் கலைஞர் எம்.எஸ்.பொன்னுத்தாயி உட்பட பல மதுரைக் கலைஞர்களும் சோமப்பா சுவாமிகளின் பக்தர்கள். சுவாமிகளின் குருபூஜையின்போது (ஸித்தி ஆனது 1968 ஆனி மிருகசீரிஷம்) மதுரை நாடகக் கலைஞர்கள் அனைவரும் கலந்துகொண்டு இந்தக் கைங்கர்யத்துக்கு உதவி வருகிறார்கள். சோமப்பா சுவாமிகள் சமாதித் திருக்கோயிலுக்குக் கடந்த 2003-ஆம் ஆண்டு அவரது குருபூஜை தினத்தில் திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.

தினமும் காலை, மாலை வேளைகளில் இவருடைய சந்நிதியில் வழிபாடு நடந்து வருகிறது. அமாவாசை, பௌர்ணமி மற்றும் பிரதோஷ தினங்களில் சோமப்பா சுவாமிகள் திருச்சமாதியில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. திரளான பக்தர்கள் கூடுகிறார்கள்.

எங்கேயோ திரிகால ஞானியாகச் சுற்றிக் கொண்டிருந்த சோமப்பா சுவாமிகளைத் திருக்கூடல் மலைக்கு வரவழைத்ததே மாயண்டி சுவாமிகளின் விளையாடல் என்றுதான் சொல்ல வேண்டும் . நிரந்தரமாக இந்த மலையில் தங்கி, ஸ்ரீதண்டாயுதபாணி திருக்கோயிலின் திருப்பணிகளை மாயாண்டி சுவாமிகள் மேற்கொண்டிருந்த காலம் அது. 1920-களில் திருக்கூடல் மலைக்கு வந்தார் சோமப்பா. அவர் இங்கு வந்த கதையைப் பார்ப்போம். ஒரு நாள் யாரோ ஆசாமி ஒருவர். அடிவாரத்தில் கொட்டப்பட்டிருக்கும் மணல் மேட்டில் வெகு நேரமாக அமர்ந்திருக்கும் தகவல் மாயாண்டி சுவாமிகளை அடைந்தது. அவருக்குத் தெரியாதா, புதியவன் எப்போது வருவான் என்று? சோமப்பாவின் வருகை மாயாண்டி சுவாமிகளை ரொம்பவே பரவசப்படுத்தியது. அவரது முகத்தில் புன்கை ததும்பியது.

இருளப்ப கோனாரை இன்முகத்துடன் அழைத்தார். அப்பு.... திருக்கூடல் மலைக்குள் ஒரு சிவக் கனி வந்தாச்சு. போ, உடனே போய் அதைப் பத்திரமா அழைச்சிட்டு வா என்று உத்தரவு போட்டார் மாயாண்டி சுவாமிகள். சுவாமிகளே இப்படிச் சொல்கிறார் என்றால், வந்திருப்பவர் யாரே ஒரு சித்த புருஷராகத்தான் இருக்கும் என்று தெளிந்த இருளப்ப கோனார் வெளியே வந்தார். அங்கே, கட்டட வேலைகளுக்காகக் குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் மேட்டில் கால்களை நீட்டிக் கொண்டு. கைகளைப் பின்பக்கம் ஊன்றியபடி, கெச்சலான முகத்துடனும் மீசை-தாடியுடனும் ஒரு ஆசாமி உட்கார்ந்திருந்தார். இவரைத்தான் சுவாமிகள் சொல்லி இருக்கிறார் போலிருக்கிறது என்பதாக அவரை நெருங்கி. ஐயா...ஐயா என்று மெள்ளக் குரல் கொடுத்தார் இருளப்ப கோனார்.

அவ்வளவுதான். அந்த ஆசாமியின் முகத்தில் பிரகாசம் களை கட்டியது. உத்தரவு வந்துவிட்டது அவருக்கு. குதியாட்டம் போட்டு மணல் மேட்டில் இருந்து எழுந்தார். மலை உச்சியைப் பார்த்தவாறு சோமப்பா சொல்லிவிட்டதா? அப்ப சரிதான். நீ போ. சோமப்பா இனிமே இங்கேதான் தங்கப் போவுது என்று இருளப்ப கோனாரைப் பார்த்துச் சொல்லிவிட்டு, மலை உச்சியை நோக்கி ஒரு குழந்தை போல் குதூகலத்துடன் ஓட ஆரம்பித்தார் அந்த ஆசாமி. அவர்தான்-சோமப்ப சுவாமிகள். சோமப்பா சுவாமிகள் யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டார் மாயாண்டி சுவாமிகள். இனம்தானே இனத்தை அறியும்? எத்தனையோ காலத் துக்குக் காடு மேடு என்று அலைந்து திரிந்து, உருண்டு திரண்டு பழுத்துப் பக்குவப் பட்ட ஞானிதாம்ப்பா சோமப்பா என்று இருளப்ப கோனாரிடம் சொன்னார் மாயாண்டி சுவாமிகள்.

சோமப்பா சுவாமிகளை மிகப் பெரிய சித்த புருஷர் என்று அவருடைய பக்தர்கள் சொல்கிறார்கள். இவர் பிறந்த ஊர் கொட்டாம்பட்டி என்றும், பசுமலை என்றும் இரு விதமான தகவல்கள் இருகின்றன. பெற்றோர்-எல்லப்பர், எல்லாம்மாள் என்பது செவி வழிச் செய்தி, முந்நூறு ஆண்டுகள் வாழ்ந்த சித்தர் இவர் என்று சொல்லப்படுகிறது.

சோமப்பாவைக் காணும்போதெல்லாம் மனம் இளகி அவருடன் உரையாடுவார். மாயாண்டி சுவாமிகள். அப்பு... என்னை எப்படி கரிசனத்துடன் பார்த்துக்கொள்கிறாயோ, அதுபோல் சோமப்பாவையும் நீ கண்ணும் கருத்தமாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். அது சாதாரண ஆள் இல்லை அப்பு. குருநாதரைவிடப் பெரியவர் என்று இருளப்ப கோனாரிடம் அவ்வப்போது சொல்வாராம் மாயாண்டி சுவாமிகள்.

இந்த வார்த்தைகளைத் தனக்கு இட்ட உத்தரவாகக் கருதி. சோமப்பாவையும் நன்றாகவே கவனித்து வந்தார் இருளப்ப கோனார். இது குறித்து சோமப்பா சுவாமிகளை நன்கு அறிந்த ஒருவர் நம்மிடம் சொன்னார்; இருளப்ப கோனார் மாயாண்டி சுவாமிகளையும் சோமப்பா சுவாமிகளையும் தன் இரு கண் போல் கவனித்து வந்தார். மாயாண்டி சுவாமிகள் ஏதாவது ஒரு உத்தரவிட்டால், தெய்வமே தனக்கு இட்ட பணியாக அதை நினைப்பார் இருளப்ப கோனார்!

சோமப்பா சுவாமிகள் 1968-ல் மகா சமாதி அடையும் வரை இந்த அன்பான கவனிப்பை இருளப்ப கோனாரும் அவரது வாரிசுகளும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.

ஒரே காலத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளும் சோமப்பா சுவாமிகளும் திருக்கூடல்மலையில் இருந்து ஆன்மிகப் பணியாற்றி, பக்தர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்தர்கள். மாயாண்டி சுவாமிகளின் காலத்துக்குப் பிறகு, அவர் விட்ட இறைப் பணிகளை சோமப்பா சுவாமிகள் தொடர்ந்தார். திருக்கூடல் மலையின் அறிவிக்கப்படாத ஒரு வாட்ச்மேன் போல், மலை எங்கும் திரிந்து உலவுவார் சோமப்பா. ரொம்பவும் எளிமையாக இருப்பார். இரவு நேரங்களில் மாயாண்டி சுவாமிகளின் சமாதிக்கு அருகில் படுத்திருப்பார். பல நேரங்களில் மலையின் பிரமாண்ட பாறைகளிலோ, மரங்களின் அடிப் பாகத்திலோ தோதாகக் கால்களை நீட்டிப் படுத்திருப்பார். சில நேரங்களில் தனக்குத் தானே ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்.

சோமப்பாவைப் பொறுத்தவரை படுத்தல் என்பது ஒரு செயல். தூங்க மாட்டார். ஒரு பாயை விரித்து, அதில் படுத்திருப்பார். பாய் போட்டு சோமப்பா படுத்திருக்கும் இடத்தைச் சுற்றி கரையான்கள் கூட்டம் கூட்டமாகச் சுற்றிக் கொண்டே இருக்கும். ஆனால், இவர் படுத்துக் கொண்டிருக்கும் இடத்துக்குக் கரையான்கள் வரவே வராது.சோமப்பா தூங்கி, எவரும் பார்த்ததில்லை, அது போல் குளித்தோ, மல ஜலம் கழித்தோ எவரும் பார்த்ததில்லை. விசேஷ நாட்கள் என்றால், மலைக்கு மேல் தண்டாயுதபாணி ஸ்வாமி கோயிலுக்கு போய் அந்த சந்நிதிக்கு அருகில் உடலைச் சுருக்கிப் படுத்துக்கொள்வார். மற்ற வேளைகளில் திருக்கூடல் மலையின் பிற பகுதிகளில் திரிவார். அவர் எங்கு போகிறார், என்ன செய்கிறார் என்பது எவருக்கும் தெரியாது.

மலையில் தண்டாயுதபாணி ஸ்வாமியைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் வழியில்-பாயில் அமர்ந்திருக்கும் சோமப்பா சுவாமிகளைக் கண்டு கையெடுத்துக் கும்பிட்டு வணங்குவர். அப்போது சோமப்பா சுவாமிகள், சோமப்பா இங்கே இல்லை. மலை மேல் கோயில்ல நிக்குது என்பார். என்னடாது....கண்ணுக்கு நேரே தரிசனம் தருகிறார். பிறகு, சோமப்பா மலைக்கு மேலே இருக்கு என்கிறாரே.... என்று குழம்பி, அவரது பக்தர்கள் மலைக்கு மேலே போவார்கள். பொதுவாக, எவரையும் சோமப்பா என்றே அழைத்துப் பழக்கப்பட்டவர் இந்த சித்த புருஷர் என்று ஏற்கெனவே சொல்லி இருந்தோம். மலைக்கு மேல் குடி கொண்டிருக்கிற ஸ்ரீதண்டாயுதபாணி யையும் சோமப்பா என்பார். மாயாண்டி சுவாமிகளையும் சோமப்பா என்பார்.

நல்ல உள்ளத்தோடு தன்னைத் தரிசிக்க வரும் அன்பர்களிடம் இன்னருள் பொழிவார் சோமப்பா. தூய உள்ளத்துடன் வரும் ஏழை எளியவர்கள் தரும் பழங்கள், திண்பண்டங்கள் போன்றவற்றை ஆர்வத்துடன் சாப்பிட்டு. அவர் களுக்கு மிச்சம் மீதியைத் தருவார். சில வேளைகளில், அவர்களிடம் இருந்து பிடுங்கிக்கூடத் தின்பார் சோமப்பா. அவர்கள் கைகளில் வைத்திருக்கும் மாலைகளை சில நேரம் வெடுக்கெனப் பிடுங்கித் தன் கழுத்தில் போட்டுக்கொண்டு காட்சி கொடுப்பார். இதைக் கண்டு பரவசமாவார்கள் பக்தர்கள். ஆசி வழங்குவார் சோமப்பா.

அதே வேளையில் உயர்ந்த அந்தஸ்திலும் பொறுப்பிலும் உள்ள சிலர், சோமப்பாவைத் தரிசிக்க மலர்மாலைகள், ஏராளமான பழங்கள் அடங்கிய தட்டுகளைக் கொண்டுவந்து சுவாமிகளின் முன்னால் வைப்பார்கள். அவர்கள் எத்தகையவர்கள், எதற்காகத் தன்னிடம் வந்திருக்கிறார்கள் என்பதை சோமப்பா அறியாமல் இருப்பாரா? சுவாமிகளை தாஜா செய்து, தாங்கள் சில காரியம் சாதித்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்துடன் வந்த இவர்கள் கொண்டு வந்திருக்கும் தட்டுகளைக் காலால் எட்டி உதைப் பார் சோமப்பா. போ.....இங்க நிக்கவே நிக்காதே....சோமப் பாவை ஏமாத்த நினைக்காதே.... சோமப்பா ஏமாறாது... போயிடு என்று கோபமாகக் கூறிவிட்டு. அந்த இடத்தை விட்டு எங்கேனும் ஒடிப் போய்விடுவார். சோமப்பா சுவாமிகள் நிகழ்த்திய ஸித்து விளையாடல்கள் நிறைய உண்டு.

கட்டிக்குளத்தில் வசித்து வந்த ஆசிரியர் திருவாசகத்தின் உறவினர் பெயர் ராமு. இவருக்கு சோமப்பாவைக் கண்டால் ஏனோ பிடிக்காது. ஆனாலும், ராமுவின் மேல் சோமப்பாவுக்கு அளவு கடந்த அன்பு உண்டு. ஒரு நாள் ராமுவை நெருங்கி, அவரது வலக் கண்ணின் அருகே தன் வலக் கையைக் கொண்டு சென்று, ஓங்கிக் குத்தட்டுமா? என்று கேட்டார். சுவாமிகள் அடிக்கடி தன்னிடம் இப்படி விளையாடுவார். என்பதால், ராமு இதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே ராமுவின் வலக் கண் ஓர் அறுவை சிகிச்சைக்கு உள்ளானது. இப்படி நடக்கப் போவதை முன்கூட்டியே குறிப்பால் உணர்த்துவார் சோமப்பா.

பஜணைக்கார அம்மா என்று ஒருவர் வசித்து வந்தார். ஒரு நாள் அந்த அம்மாளைத் தேடி அவரது வீட்டுக்குப் போன சோமப்பா, அந்த அம்மாவை அழைத்து, உன்னைப் பூச்சி கடிக்கும். ஆபத்து சூழும் என்று சொல்லிவிட்டுப் போனார். சுவாமிகள் என்ன சொல்ல வருகிறார்? என்கிற குழப்பத்தில் எதுவும் புரியாமல் தவித்தார். பஜனைக்கார அம்மா. ஆனால் இதை அடுத்த ஒரு சில நாட்களில் பஜனைக்கார அம்மா பாம்பு கடித்து இறந்தே போனார். பூச்சி கடிக்கும் என்று சுவாமிகள் குறிப்பிட்டது பாம்பை.

மாயாண்டி சுவாமிகள் சமாதி ஆகிவிட்டதை (1930-ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 11-ஆம் தேதி) அறிந்து எங்கிருந்தோ வந்து சேர்ந்தார். சோமப்பா. மாயாண்டி சுவாமிகளின் திருமுகத்தை திருச்சமாதி வைப்பதற்கு முன் ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்கிற ஆவலில், எத்தனையோ பக்தர்கள் எங்கெங்கிருந்தோ வந்து குவிந்திருந்தனர். சமாதி நிலையை எய்துவிட்ட சுவாமிகளின் திருமுகத்தையே வைத்த கண் வாங்காமல் வெகு நேரத்துக்குப் பார்த்துக் கொண்டிருந்தார் சோமப்பா. முகம் இறுகிப் போயிருந்த சோமப்பா, திடீரென மலர்ந்தார். மாயாண்டி சுவாமிகள் இதழ்களில் ஒரு புன்னகை அரும்பியதை அப்போது சோமப்பா கவனித்துதான் இதற்குக் காரணம். இதை அடுத்து, அங்கு நிலவிய நிசப்தத்தைக் கலைக்கும் வகையில், சோமப்பா சாகவில்லை. சோமப்பா சாக மாட்டான் என்று பெருங்குரல் எடுத்துக் கத்திக்கொண்டே மலைக்கு ஓடி விட்டார்.

அதாவது. என் உடல் என்னை விட்டுப் பிரிந்தாலும், நான் என்றென்றும் உன்னுடனும் என் பக்தர்களுடன் இருந்து அருள் பாலிப்பேன் என்கிற செய்தியை சோமப்பா வாயிலாக நமக்கெல்லாம் உணர்த்தி இருக்கிறார் மாயாண்டி சுவாமிகள். சமாதி ஆன பிறகும், மாயாண்டி சுவாமிகள் அருளிய புன்னகை இதைத்தான் நமக்குச் சொல்கிறது. மாயாண்டி சுவாமிகளைப் போலவே, தான் திருச்சமாதி ஆகும் தினத்தையும் நேரத்தையும் முன்கூட்டியே சொல்லி விட்டுத்தான் சோமப்பா சுவாமிகளும் சமாதி ஆனார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி இருந்து. இவரது திருச்சமாதி நிகழ்வு நடந்தது.

தூய உள்ளமும் நற்சிந்தனைகளும் இருப்பவர்களைத்தான் இன்றைக்கு சோமப்பா தன் ஜீவ சமாதிக்கு வரவழைத்து அருள் புரிகிறார். சித்தர்களை தரிசிப்பதில் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய திருச்சமாதி இது!

🌿ஓம் நமசிவய 🌿