Friday 14 July 2017

அகில இந்திய பார்வர்ட் பிளாக்

      1939-ல் தலைவர் நேதாஜி அவர்கள் காங்கிரஸ் இயக்கத்திற்குள்ளே இடதுசாரிய சிந்தனைகளை கொண்ட அனைவரையும் ஒன்றிணைத்து அகில இந்திய பார்வர்டுபிளாக் இயக்கத்தை தொடங்கினார்.இயக்கம் தொடங்கப்பட்ட அந்த வருடத்திலே தலைவர்கள் நேதாஜியும்,தேவரும் கைது செய்யப்பட்டார்கள்.1941-ல் நேதாஜி அவர்கள் நாட்டை விட்டு தன்னந்தனியாக வெளியேறி செல்கிறார்.1942-ல் பிரிட்டீஷ் அரசாங்கம் பார்வர்டுபிளாக் இயக்கத்திற்கு தடை விதிக்கிறது.1939-ல் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட தேவர் அவர்கள் இரண்டாம் உலக யுத்த போர் முடிவடைந்த பிறகு 1945-ல் தான் விடுதலை செய்யப்படுகிறார்.அதுவரை காங்கிரஸ் இயக்கத்திற்குள்ளே செயல்பட்ட பார்வர்டுபிளாக் காங்கிரஸை விட்டு 1948-ல் விலகி வருகிறது.விலகி வரும்போதே இரண்டு அணியாக பிரிந்து வருகிறது.அதன்பிறகு 1954-ல் பார்வர்டுபிளாக் இயக்கத்தை தன்னகப்படுத்தி கொண்டு இயக்கத்தை இல்லாமல் ஆக்கவேண்டும் என்று நேரு திட்டமிட்டு பார்வர்டுபிளாக் இயக்கத்தை காங்கிரசுடன் இணைக்க முயற்சி செய்தார்.அவரது முயற்சி வெற்றிபெறவில்லை.பார்வர்டுபிளாக் காங்கிரசுடன் இணையவில்லை.அதன்பிறகு 1952-ல் இருந்து பார்வர்டுபிளாக் இயக்கம் தேர்தல் அரசியலில் ஈடுபட்டது.தேவர் அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கினால் இயக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது.தேவரது மக்கள் செல்வாக்கை எப்படியாவது குறைக்கவேண்டும் என்பதற்காக காமராஜர் திட்டமிட்டு முதுகுளத்தூர் கலவரத்தை 1957-ல் ஏற்படுத்தினார்.அதன்பிறகு தேவர் மீது பொய்யான கொலை குற்றத்தை சுமத்தி அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தார்.பார்வர்டுபிளாக் தொண்டர்கள் மீது எண்ணற்ற அடக்குமுறைகளை ஏவினார்.அந்த அடக்குமுறைகளின் உச்சமாக 5 பார்வர்டுபிளாக் தொண்டர்களை கண்ணைகட்டி,கையைகட்டி சுட்டுக்கொன்றார்.இவ்வளவு செய்தும் தேவருக்கு மக்களிடத்தில் இருந்த செல்வாக்கை அவரால் குறைக்கமுடியவில்லை.1957-ல் திட்டமிட்டு ஒரு கலவரத்தை ஏற்படுத்தி எந்த மக்களை தேவருக்கு எதிராக திருப்ப நினைத்தாரோ அந்த மக்களிடம் வாக்கு கேட்டு செல்லாமலே அவர்களின் ஆதரவினை பெற்று 1962 தேர்தலில் தேவர் வெற்றி பெற்றார்.1963-ல் தலைவர் தேவர் அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்துவிட்டார்.அவரது மறைவிற்கு பிறகு அவரது தொண்டர்கள் எல்லாம் மூட்டையிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட நெல்லிக்காய்களை போல அங்கொன்றுமாய்,இங்கொன்றுமாய் சிதறிக் கிடப்பார்கள்.அவ்வாறு சிதறி கிடக்கின்ற தொண்டர்களை எல்லாம் தங்கள் பக்கம் இழுத்து கொள்ளவேண்டும் என்று ஒவ்வொரு கட்சிகளும் திட்டம் தீட்டின.அவர்களின் எண்ணங்களை எல்லாம் தவிடுபொடியாக்கின்ற வகையிலே தேவர் திருத்தொண்டர்களை எல்லாம் வழிநடத்தி செல்ல தேவர் தந்த தேவராக தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் உருவெடுத்தார்.ஏ.ஆர்.பெருமாள் அவர்கள்,வீரராகவன் அவர்கள்,கே.கந்தசாமி அவர்கள்,டீ.பி.எம்.பெரியசாமி அவர்கள் போன்ற தலைவர்கள் அவருக்கு தோளோடு தோள் நின்றார்கள்.தேவர் மீது பொய்யான கொலைக்குற்றம் சுமத்திய காங்கிரசை வேரோடும்,வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிவோம் என்று சபதம் ஏற்றார்கள்.அதன்படி 1967 தேர்தலில் காமராஜர் எதிர்ப்பாளர்களை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கி காமராஜரையும்,காங்கிரசையும் வீழ்த்தினார்கள்.அந்த தேர்தலில் காமராஜர் ஒரு இளம்பிள்ளையிடம் தோற்று போனார்.திமுக கூட்டணியில் இருந்த பார்வர்டுபிளாக் இயக்கத்திற்கு 1971 தேர்தலில் கருணாநிதி அவர்கள் கூட்டணி தர்மத்தையும் மீறி மிகப்பெரிய துரோகத்தை இழைத்தார்.பார்வர்டுபிளாக் தலைவர்களுக்கு போட்டியாக டம்மி பார்வர்டுபிளாக் தலைவர்களை உருவாக்கி இயக்கத்தை அழிக்க நினைத்தார்.ஆனால் அவரால் முடியவில்லை.இப்படி பல்வேறு சோதனைகளையும்,துரோகங்களையும் சந்தித்து வளர்ந்த இயக்கம் தான் பார்வர்டுபிளாக்.நேரு முதல் கருணாநிதி வரை இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டு தோல்வியை தான் சந்தித்துள்ளார்கள்.நேதாஜியும்,தேவரும் செய்த புண்ணிய செயல்களால் தான் இயக்கம் இன்றைக்கும் உயிரோட்டமாக உள்ளது.அவர்களது ஆசியுடன் இயக்கம் மீண்டும் ஒரு மிகப்பெரிய வளர்ச்சியை அடையும்.பார்வர்டுபிளாக் இயக்கத்திற்கு அழிவு என்பது கிடையாது.இயக்கம் நிரந்தமானது,அதன் கொள்கைகள் நிரந்தரமானது,அதன் இலட்சியங்கள் நிரந்தரமானது.புரட்சிகர சிந்தனைகளை கொண்ட பார்வர்டுபிளாக் ஒருபோதும் மடிந்து போகாது.நீண்ட நெடிய வரலாற்று பயணத்தை கொண்ட பார்வர்டுபிளாக் இயக்கத்திற்கு ஒரு தேக்கநிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.அதனை சரிசெய்து இயக்கம் மீண்டும் வீறுகொண்டு எழும்.ஜெய்ஹிந்த்!!!

No comments:

Post a Comment