Saturday 21 October 2017

பத்திரிகையாளன் பார்வையில் தேவர்

மீண்டும் நினைவில் இந்த நாள்..4.4.2008..!

தினத்தந்தி, கதிரவன், தினபூமி, தினமலர்,தினகரன்-தமிழ்முரசு என பல நாளிதழ்களில் ஏரியா நிருபராக, செய்தியாளராக, பகுதி பொறுப்பாளராக , சீனியர் நிருபராக பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு திரைத்துறையில் கால் பதிக்க முடிவு செய்தேன்.
பத்திரிகையாளன் என்ற அடையாளத்தோடு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்றை எ ந்த கலப்பும் இல்லாமல் பின் வரும் தமிழ் மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் சொல்ல முடிவு செய்தேன்.
அது ஏன் இவரை பற்றி...

கேள்விகள் தோன்றலாம். பொதுவாகவே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரில் வாழ்க்கை நடத்தும் அரசியல் கட்சிகளோ அல்லது தனிமனித அமைப்புகளோ அவர் நாட்டுக்கு என்ன செய்தார் என்பதை சொல்ல மறந்து அல்லது மறைத்து ஒரு சாராருக்கு மட்டுமே அவர் சொந்தம் என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
அது போன்ற சூழலில் அவரது நூறாவது ஜெயந்தி தினம் வந்தது.
அதை கொண்டாடும் விதமாக என் நண்பரும்,தயாரிப்பாளருமான கார்த்திக் உதவியுடன் சத்தமில்லாமல் "பசும்பொன் தேவர் வரலாறு" தொடங்கினேன்.
வரலாறு சொல்லவேண்டும் என்பதால் பிழைகள் வராமல் மிக மிக கவனத்துடன் களத்தில் ஓடினோம்.
அப்போது என் நண்பரும் செய்தியாளருமான கதிரவன் மூலமாக மரியாதைக்குரிய திரு.நவமணி அவர்களின் நட்பு கிடைத்தது.
இ ந்த வரலாற்று ஆவண படம் முழுமை பெற்றது இவரால் தான்.
ஆவண படம் என்பதால் நிஜங்கள் தேடி ஊர் ஊராக போனோம்.
மறைக்கப்பட்ட பல வரலாறு கள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கின.
சுமார் 10 மாதங்கள் ஆதார ஆவணங்கள் திரட்டிய பிறகு "பசும்பொன் தேவர் வரலாறு" முழுமை பெற்றது.
இப்போதைய இயக்குனர் ஜீவாசங்கர் ஒளிப்பதிவில், யுகபாரதி பாடலில்,இப்போதைய நடிகர், தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி இசையில் உருவானது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்த வாழ்கை வரலாறு தணிக்கை துறையால் பல கட்டங்கள் கவனமாக பார்க்கப்பட்டு "யு" சான்று வழங்கப்பட்டது.

அதற்கு முன்பு இணையத்தில் முத்துராமலிங்க தேவர் என்றோ, பசும்பொன் தேவர் என்றோ எ ந்த வார்த்தைகள் போட்டு தேடினாலும் "தேவர் மகன்" படத்தின் தகவல்களும், கமல்ஹாசன், சிவாஜி கணேசன் அவர்களின் படங்களும் தான் வரும்.
ஆனால்...
எங்களின் "பசும்பொன் தேவர் வரலாறு" படத்திற்கு பிறகு இப்போது இணையத்தில் எங்கு தேடினாலும் பல ஆயிரம் பக்கங்களில் எங்கள் உழைப்பு .

அதோடு மட்டுமல்லாமல் உலக சினிமா வரலாற்றில் ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்று ஆவண படம் வணிக ரீதியாக திரையரங்குகளில் வெளியான முதல் ஆவண படம் என்ற பெருமையும் "பசும்பொன் தேவர் வரலாறு" பெற்றது.

இப்படி சாதனை படைத்த ஆவண படத்தை முழுமையான திரைப்படம் ஆக எடுக்க அவர் பெயரை,படத்தை பயன் படுத்தும் யாரும் முன் வராமல் இருப்பது வேதனையான உண்மை.

இன்னும் நிறைய உண்டு... நேரம் வரும் போது பதிவிடுவேன்.

என்றும் அன்புடன்
இயக்குநர் ஆபிரகாம் லிங்கன்

No comments:

Post a Comment